திமுக கூட்டணியில் 1 சீட்! மனிதநேய மக்கள் கட்சியின் கடைசி நேர முயற்சி! ஸ்டாலின் முடிவு என்ன?
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 1 சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் மனிதநேய மக்கள் கட்சி மிக உறுதியாக உள்ளது. இது குறித்து ஒன் இந்தியா தமிழ் ஏற்கனவே செய்தியாகவும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த பாரிவேந்தர் இப்போது பாஜக பக்கம் சென்றுவிட்டார். இதனால் அந்த ஒரு இடத்தை தங்களுக்கு திமுக ஒதுக்க வேண்டும் என எண்ணுகிறார் மமக தலைவர் ஜவாஹிருல்லா.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் கட்டமைப்பு ஓரளவு பலமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகளை காட்டிலும் மமகவும், தமுமுகவும் ஓரளவு ஆக்டிவாக இயங்கி வருவது அந்தக் கட்சியின் ப்ளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியையாவது வாங்கிவிட வேண்டும் என்பதில் ஜவாஹிருல்லா மிக உறுதியாக இருக்கிறார். இதை ஒன் இந்தியா தமிழில் சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்திருந்தோம். இப்போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதால், மமக தரப்பில் மிக கடுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதே திமுகவிடம் 1 சீட் கேட்டது மமக. ஆனால் அப்போது அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டது திமுக. அதனால் தான் இந்த முறை சீட் விவகாரத்தில் மமக இவ்வளவு தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் எடுக்கும் முடிவு தான் இறுதியானது என்பதால் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பியதும் தான் ஃபைனல் முடிவு தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் காலம் காலமாக உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கே 1 சீட் கொடுக்க திமுக தயங்குவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications