Oreo பிஸ்கெட்டால் "மஞ்சுமெல் பாய்ஸு" க்கு வந்த பிரச்சினை! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யம்!
சென்னை: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குழிக்குள் தவறி விழுந்து சுபாஷாக நடித்த ஸ்ரீநாத் பாஸிக்கு பிஸ்கெட்டால் மேக்கப் போடப்பட்டது.
மஞ்சுமெல் பாய்ஸ் என்ற திரைப்படத்தை சிதம்பரம் எஸ் பொடுவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சோபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ், கணபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழகத்தில் உள்ள கொடைக்கானலில் குணா குகை அருகே படமாக்கப்பட்டது.

இங்குதான் 101 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நண்பர்கள், கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார்கள். அவ்வாறு செல்லும் போது கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்தில் எடுக்கப்பட்ட குணா குகைக்கு சென்றனர்.
குணா குகைக்குள் செல்ல அப்போது வனத்துறையினரிடம் அனுமதி பெற்று சில வழிகளை செதுக்கி, மரக்கிளைகளை துண்டித்து வழி ஏற்படுத்திக் கொண்டு உள்ளே தவழ்ந்தபடி சென்றதாக அந்த படத்தின் இயக்குநர் சந்தான பாரதி தெரிவித்திருந்தார். அதன் பிறகு அந்த குணா குகைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் இந்த மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்காக குணா குகை போன்று செட் போடப்பட்டு அதில் படம் எடுக்கப்பட்டது. இந்த குணா குகைக்கு அந்த கொச்சி பாய்ஸ் நண்பர்கள் செல்கிறார்கள். அப்போது சுபாஷ் என்பவர் ஒரு குழிக்குள் விழுந்துவிடுகிறார். அவர் விளையாடுகிறார் என நண்பர்கள் நினைத்த போது அது நிஜம்தான் என்பதை உணர்ந்து அழுகிறார்கள்.
இதனால் அங்கிருக்கும் தமிழக கைடிடம் உதவி கேட்கிறார்கள். அவர்களோ குணா குகைக்குள் சென்று ஒருவரை மீட்பது கஷ்டம். கீழே ஆக்ஸிஜன் இருக்காது. எனவே மீட்பு பணி செய்வோரின் உயிருக்கே உத்தரவாதம் இல்லை என கையை விரிக்கிறார்கள். மேலும் உள்ளே விழுந்தவர் உயிருடன் பிழைக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள். இதன் பிறகு அந்த நண்பர்கள் குழு குழிக்கு அருகே அமர்ந்து அழும் போது குழிக்குள் இருந்து சுபாஷின் குரல் கேட்கிறது.
இதனால் அவர் உயிருடன் இருப்பதை உணர்ந்து மீட்பு பணிகள் தொடர்கிறது. சுபாஷை மீட்க மீட்பு படையினரே தயங்கும் போது அவருடைய நண்பர் உள்ளே இறங்கி நண்பனை மீட்க முற்படுகிறார். அவர் சுபாஷை உயிருடன் மீட்டாரா, அவர் உயிருடன் வெளியே வந்தாரா என்பதுதான் கதை.
இந்த படத்தில் சுபாஷ் குகைக்குள் இருக்கும் போது அவர் விழுந்த வேகத்தில் உடல் முழுக்க காயங்கள் இருந்தன. ரத்தமெல்லாம் உறைந்து காணப்பட்டன. இந்த சீனை பார்க்கும் அனைவருமே கலங்கிவிட்டனர். குகையில் இருந்து விழுந்தால் இவ்வளவு அடி படும் என்ற அளவுக்கு பயத்தை ஏற்படுத்தியது. சுபாஷின் மேல் அழுக்கு ரத்தக் கறை எல்லாம் இருந்தது.
ஸ்ரீநாத் பாஸிக்கு அத்தனை தத்ரூபமாக மேக்கப் போட்டிருந்தார்கள். இதற்காக ஓரியோ பிஸ்கெட்டுகளை பயன்படுத்தியதாக இயக்குநர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் மேக்கப்பில் இப்படி புதிய முறையை புகுத்தினாலும் அந்த காட்சிகளை படமாக்கும் போது மிகவும் கஷ்டப்பட்டோம்.
அந்த பிஸ்கெட்டுகளுக்காக எறும்புகள் அவர் மீது ஏறி கடித்தன. அந்த வலியையும் தாங்கிக் கொண்டுதான் ஸ்ரீநாத் நடித்து கொடுத்தார். இதற்காக மேக்கப் கலைஞர் ரோனெக்ஸ் சேவியருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என மஞ்சுமெல் பாய்ஸின் இயக்குநர் சிதம்பரம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications