வடமாநில நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கினேனா.. நிரூபிக்க முடியுமா? கொதித்த அண்ணாமலை! அமைச்சருக்கு சவால்
சென்னை: வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்றதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறிய நிலையில், நான் கையூட்டு பெற்றதை 48 மணி நேரத்தில் நிரூபிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை வரும் 25 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எதிர்க்கட்சிகளும் தமிழக அரசை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:-

2 அரசியல்வாதிகள் தான் உண்மையில்லாமல், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார்கள். ஒருவர் சொல்கிறார் பினாயிலையும் பிளீச்சிங் பவுடரையும் கலந்தால் பால் வரும் என்று. இந்த தத்துவத்தை அவர் எங்கு கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. ஐசக் நியூட்டனுக்கு அடுத்து இருக்கக்கூடியவர். அறிவுக்கொழுந்து. இவர் பின்னாடி சில சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
கையூட்டல் பெற்று விட்டு: இன்னொரு அறிவாளி ரோலக்ஸ் வாட்ச் கட்டிக்கொண்டு ஒரு ரிப்போர்ட்டை சொல்கிறார். அதில் என்ன உண்மை இருக்கிறது. இது தமிழ்நாட்டு விசாய மக்களின் வாழ்வாதார பிரச்சினை. இதை உயர்த்துவதற்கான வழியை தான் நாம் செய்ய வேண்டும். எனவே குற்றம் குறைகள் இருந்தால் அவற்றை என்னுடைய கவனத்திற்கு அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.
நாங்கள் அதனை சீர் செய்வோம். ஆனால் வடநாட்டில் இருக்கிற நிறுவனங்களை இங்கே கொண்டு வர வேண்டும் என்று நோக்கத்தோடு, அதற்கு கைக்கூலிகலாக, அதற்கு கையூட்டல் பெற்று விட்டு செயல்படுவது என்பது தமிழக மக்களின் உணர்வுக்கும், வளர்ச்சிக்கும், விவசாய மக்களுடைய வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் செயல் என்பதை இப்போதாவது அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
48 மணிநேரம் அவகாசம்: எந்த கேள்விக்கும் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். இந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பதில் அளிக்கும் வகையில், அடுத்த 48 மணி நேரத்தில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் நன் கையூட்டு பெற்றதாக நிரூபிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- திரு மனோ தங்கராஜ் அவர்களே, இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன்.
பெரும் சாபக்கேடு: ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும். உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு. இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications