வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
சென்னை: உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மன்சூர் அலிகான் இன்று டிஸ்சார்ஜ் ஆனார். வேலூர் லோக்சபா தொகுதியில் அவர் சுயேச்சையாக போட்டியிடும் நிலையில் நாளை அங்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகரும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் வேலூர் தொகுதியில் முகாமிட்டு தீவிரமாக வாக்கு சேகரித்தார். நேற்று பிரசாரத்துக்கு கடைசி நாள் என்பதால் மன்சூர் அலிகான் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். வாணியம்பாடியில் பிரசாரம் செய்த அவர் நேற்று மதியம் குடியாத்தம் நோக்கி சென்றார்.
அந்த சமயத்தில் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மன்சூர் அலிகான், குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் தான் இன்று காலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், ‛‛தான் குடியாத்தத்தில் பழச்சாறு, மோர் குடித்ததாகவும், அதன்பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியதாகவும் தெரிவித்தார். மேலும் விஷ முறிவு சிகிச்சை எடுத்து கொண்டு குணமாகி வருகிறேன்'' என தெரிவித்து இருந்தார். விஷமுறிவு சிகிச்சை எடுத்து கொண்டதாக அவர் கூறியுள்ளதால் பழச்சாறு அல்லது மோரில் விஷம் கலக்கப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் தற்போது சென்னை மருத்துவமனையில் இருந்து மன்சூர் அலிகான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. மன்சூர் அலிகானை ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். ஆனால் மன்சூர் அலிகான் ஓய்வு எடுக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதாவது லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ளதால் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளாராம்.
இன்னும் சொல்லப்போனால் லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் தான் அவர் இன்றே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும்படி கூறி வெளியே வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications