அது தவறான புரிதல்.. நடிகை திரிஷாவிடம் நான் மன்னிப்பு கோரவில்லை! ட்விஸ்ட் கொடுத்த மன்சூர் அலிகான்
சென்னை: நடிகை திரிஷாவை அவதூறாக பேசிய விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இதனை அவர் மறுத்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில நடிகை திரிஷா குறித்து, நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருந்த கருத்துக்கள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. அவரது பேச்சுக்கள் அருவருக்கத்தக்கதாக இருப்பதாக கூறியுள்ள திரிஷா, இவரை போன்றவர்களால்தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து x சோஷியல் மீடியாவில் “நடிகர் மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவை பார்த்தேன். பாலியல் ரீதியாகவும், மரியாதைக்குறைவாக மற்றும் கேவலமான எண்ணத்துடன் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். என்னுடன் நடிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து ஆசைப்படலாம். இதுவரை அவருடன் சேர்ந்து நடித்ததில்லை என்பதில் நிம்மதியடைகிறேன். இனியும் சேர்ந்து நடிக்கமாட்டேன். இவரைப்போன்றவர்கள் மனிதக்குலத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என்று திரிஷா பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் சினிமா வட்டத்தை தாண்டி அரசியல் தளத்திலும் எதிரொலித்தது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். சுயவிளம்பரத்திற்காக இது போன்று செயல்படும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜனும் திரிஷாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருந்தார்.
அதேபோல இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என அதன் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கூறியிருந்தார். இதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தொடர் புகார்களையடுத்து பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இப்படி இருக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகின. எனவே ஒரு வழியாக இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த மன்சூர் அலிகான், “நான் திரிஷாவிடம் மன்னிப்பு கோரவில்லை. மரணித்துவிடு என்றுதான் சொன்னேன். ஆனால் அந்த வார்த்தை மன்னித்துவிடு என புரிந்துக்கொள்ளப்பட்டது. எனவே பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என நானும் அமைதியாக இருந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications