த்ரிஷா குறித்த சர்ச்சை! முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் மன்சூர் அலிகான்! என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார்.
நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

லியோ படத்தில் த்ரிஷா நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் மன்சூர் அலிகான் நடித்தார். அதில் விஜய் குறித்து பிளாஷ்பேக் சொல்லும் காட்சி அவருக்கு கொடுக்கப்பட்டது. சில நிமிடங்கள் மட்டுமே அவர் நடித்திருந்தார்.
ஆனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து மிகவும் மோசமான வகையில் பேசியிருந்தார் மன்சூர் அலிகான். இது குறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன். அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன்.
மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்திருந்தார். நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் தமிழக டிஜிபி உத்தரவின்பேரில் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்சூர் அலிகான் இன்று ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று மன்சூர் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவானது நீதிபதி எஸ். அல்லி முன்பு நவம்பர் 23 ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். ஏன் என நீதிபதி அல்லி கேட்டதற்கு எதிர்மனுதாரராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பதற்கு பதிலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையம் என சேர்த்துவிட்டதாக கூறினார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications