நயினார் நாகேந்திரனிடம் ஒழுங்கா இருந்துக்கோ என சொன்ன பாஜக பெண் நிர்வாகி! அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல்
சென்னை: பாஜக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசினால் பாதிபேர் எனக்கு வணக்கம் சொல்வதில்லை என்றும், சிலர் என்னை யார் என்றே தெரியாது என சொல்வதாகவும், நான் நயினார் நாகேந்திரன் பேசுகிறேன் என்று சொன்னால் உடனே அவர்களுடைய நைனா என நினைத்து, 'என்னை ஒழுங்கா இருந்துக்கோ..' என்று பேசுவதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
செல்போனில் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் நம்முடைய கட்சியில் இருக்கும் பாதி பேர் வணக்கம் கூட சொல்வதில்லை, போனை எடுத்தவுடன் சொல்லுங்கள் என கூறுகின்றார்கள். வடசேரி பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிக்கு தொடர்பு கொண்டால் என்னை தெரியவில்லை என்றே கூறுகிறார் என்று நயினார் நாகேந்திரன் பேசினார்.

பூத் வலிமைப்படுத்தும் பயணம்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தமிழக பாஜக சார்பில், "பூத் வலிமைப்படுத்தும் பயணம்" மற்றும் "மாநில பயிலரங்கம்" நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தான் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இவ்வாறு பேசியுள்ளார்.
பூத் கமிட்டிகளை வலிமைப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் முக்கிய நிர்வாகிகளை நேரடியாக சென்று சந்தித்து வலிமைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. இதேபோன்று பாஜக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வது, பெண்களின் பிரதிநிதித்துவம், தெருமுனை கூட்டங்கள் போடுவது, சமூக ஊடக பரப்புரை போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
வணக்கம் கூட சொல்வது கிடையாது
அப்போது நயினார் நாகேந்திரன் பேசியதாவது:- செல்போனில் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் நம்முடைய கட்சியில் இருக்கும் பாதி பேர் வணக்கம் கூட சொல்வது கிடையாது. போனை எடுத்த உடனேயே, சொல்லுங்கள் என கூறுகின்றார்கள்.. குறிப்பாக வடசேரி பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு கொண்டால் என்னை தெரியவில்லை என்றே சொல்கிறார்.
இப்படித்தான் கடலூரை சேர்ந்த ஒரு பெண் நிர்வாகியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் நயினார் நாகேந்திரன் பேசுகிறேன் என கூறினேன். ஆனால் அவங்க காதுக்கு நைனா பேசுவது போல கேட்டு இருக்கு. உடனே அவர்களுடைய நைனா என நினைத்து, 'என்னை ஒழுங்கா இருந்துக்கோ..' என்றார். உடனே நான் போனை பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்துவிட்டேன். உண்மையில் நடந்த விஷயம் இது..
இது எதார்த்தம் தான்
இப்படித்தான் சில சூழல் இருக்கிறது. எதார்த்தம் இது தான். நான் தவறு என்று சொல்வதில்லை. கட்சியின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டால், முதலில் வணக்கம் சொல்லிவிட்டு பேசுங்கள்.. வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். நம்முடைய நோக்கம் 2026 சட்டமன்ற தேர்தல் அல்ல. 2029 நாடாளுமன்ற தேர்தல் தான். சட்டசபை தேர்தலில் பாஜக 40 அல்லது 50 இடங்களில் நிச்சயமாக வெற்றி பெறும்.
தமிழகத்தில் தினமும் பாலியல் குற்றங்கள் நடக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 24 லாக் அப் மரணங்கள் அரங்கேறியுள்ளது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், ஹெச் ராஜா, பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications