சென்னையில் கால் பதிக்க.. உலகளாவிய நிறுவனங்கள் போட்டி.. எண்ணூர் துறைமுகத்தில் தரமான சம்பவம்!
சென்னை: சென்னைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் மிக முக்கிய 12 அரசு துறைமுகங்களில் ஒன்றான எண்ணூர் காமராஜர் துறைமுகம், சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது. இங்கு இரண்டாவது பெரிய கன்டெய்னர் முனையத்தை (Container Terminal) அமைப்பதற்கான புதிய டெண்டர் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், உலகின் முன்னணி கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் இந்த திட்டத்தைக் கைப்பற்ற தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.
மறுபுறம், இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி குழுமம், நாட்டின் போட்டித்தன்மை விதிகளின் காரணமாக இந்த புதிய டெண்டரில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது வணிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.3,800 கோடி திட்ட விவரம்
சென்னை துறைமுகத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் செயல்பாட்டுத் தாமதங்கள் காரணமாக, சமீப காலங்களாக எண்ணூர் துறைமுகத்தை நாடும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், எண்ணூர் துறைமுகப் பொறுப்புக் கழகம் புதிய கன்டெய்னர் முனையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் DBFOT (Design, Build, Finance, Operate, and Transfer) அதாவது வடிவமைப்பு, கட்டுமானம், நிதி திரட்டல், இயக்குதல் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒப்படைத்தல் என்ற பொது-தனியார் கூட்டு பங்களிப்பு (PPP) மாதிரியின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. தோராயமாக 450 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,800 கோடி) செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த புதிய முனையம், 1,000 மீட்டர் நீளமுள்ள கப்பல் கட்டும் தளத்தையும் (Quay), ஆண்டுக்கு 2 மில்லியன் TEU (Twenty-Foot Equivalent Units) சரக்குகளைக் கையாளும் பிரம்மாண்ட திறனையும் கொண்டிருக்கப் போகிறது. இந்த டெண்டர் பணிகள் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என துறைமுக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களம் இறங்கும் சர்வதேச நிறுவனங்கள்; அதானிக்கு செக்!
தற்போது எண்ணூர் துறைமுகத்தின் ஒரே ஒரு கன்டெய்னர் முனையத்தை அதானி போர்ட்ஸ் (APSEZ) நிறுவனம் மட்டுமே இயக்கி வருகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு 30 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த முனையம், தற்போது 8 லட்சம் TEU சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டது.
இந்தியாவின் தற்போதைய தொழில் போட்டி விதிகளின்படி (Anti-Monopoly Rules), பொதுத்துறைமுகங்களில் ஒரே ஒரு தனியார் நிறுவனம் மட்டுமே முழுமையாக ஆதிக்கம் செலுத்தி ஏகபோக உரிமையை (Monopoly) உருவாக்குவதை அரசு ஊக்குவிப்பதில்லை. எண்ணூர் துறைமுகத்தில் ஏற்கனவே அதானி நிறுவனம் மட்டுமே கன்டெய்னர் முனையத்தை இயக்கி வருவதால், சந்தைப் போட்டியை நிலைநிறுத்த இந்த புதிய டெண்டரில் அதானி குழுமம் பங்கேற்க அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று தொழில் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், கடந்த 2023-ல் அதானியின் இந்த முனையத்தில் 49 சதவீத பங்குகளை வாங்கிய முன்னணி சர்வதேச கப்பல் நிறுவனமான MSC (TiL மூலமாக), இந்த புதிய திட்டத்தில் போட்டியிட முடியுமா என்பதும் தற்போதைய விதிகளின் கீழ் கேள்விக்குறியாகவே உள்ளது.
அதானி குழுமம் களத்தில் இல்லாத பட்சத்தில், இந்த மெகா திட்டத்தைக் கைப்பற்ற உலகின் முன்னணி கப்பல் போக்குவரத்து நிறுவனங்களான பிரான்சின் CMA CGM மற்றும் ஜெர்மனியின் Hapag-Lloyd ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் ஜே.எம். பாக்ஸி (JM Baxi Group) குழுமத்துடன் இணைந்து ஏலத்தில் குதிக்கத் திட்டமிட்டு வருகின்றன.
அசுர வேகத்தில் வளரும் எண்ணூர் துறைமுகம்
கடந்த காலங்களில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் பெரும்பாலும் சிறிய ஃபீடர் (Feeder) ரகக் கப்பல்களையே நம்பியிருந்தன. ஆனால், கடந்த 2021-ல் மெர்ஸ்க் (Maersk) நிறுவனம் ஐரோப்பாவிற்கான நேரடி கப்பல் சேவையைத் தொடங்கியதும், அதைத் தொடர்ந்து 2025 பிப்ரவரியில் ஜெமினி அலையன்ஸ் (Gemini Cooperation) தனது சேவைகளை இங்கு கொண்டு வந்ததும் எண்ணூரின் வர்த்தக மதிப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
துறைமுகத்தின் தற்போதைய வளர்ச்சி எண்களும் இதையே நிரூபிக்கின்றன. கடந்த 2025-26 நிதியாண்டில் 7,01,000 TEU சரக்குகளைக் கையாண்ட இந்த முனையம், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களிலேயே 1,22,000 TEU சரக்குகளைக் கையாண்டு, கடந்த ஆண்டை விட 30 சதவீத அசுர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
எழும் புதிய சவால்கள்
சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் துடித்தாலும், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கன்டெய்னர் முனையங்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக உயர்ந்து வருகிறதோ என்ற கவலையும் எழுந்துள்ளது. எண்ணூருக்கு அருகிலேயே அதானி குழுமத்திற்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகம் மற்றும் ஆந்திராவின் கங்காவரம் துறைமுகம் போன்ற தனியார் துறைமுகங்கள் வேகமாக வளர்ந்து வருவதால், வரும் காலங்களில் முனையங்களின் பயன்பாட்டு விகிதத்திலும், கட்டணங்களிலும் கடும் போட்டி நிலவும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எது எப்படியாகினும், இந்த புதிய டெண்டர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியைப் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications