அதிமுக விஜயபாஸ்கரை பக்கத்தில் வெச்சிட்டு முதலமைச்சர் அதை சொல்லலாமா? திமுகவையும் வாரி சுருட்டிய விஜய்
கரூர்: கரூர் கூட்டத்தில் செந்தில் பாலாஜியைக் குறிப்பிட்டு பேசிய விஜய், "இன்னும் எத்தனை பேர் மாட்டப் போகிறார்களோ தெரியவில்லை" என்றார். தனி மெஜாரிட்டி இல்லாத ஒரு அரசுக்கு "எப்பொழுது வேண்டுமானாலும் கவிழ்த்து விடுவார்களோ" என்ற பதற்றம் இருக்கும்.. அதுதான் விஜய்யின் இத்தகைய பேச்சுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி.
Behindwoods O2 என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மணி, "இன்றைக்குக் கரூரில் நடந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பேச்சு முழுக்க முழுக்க ஒரு அரசியல் மேடை உரைதான். கரூர் துயர சம்பவத்தில், அபாண்டமாகத் தன் மீது பழி சுமத்தப்பட்டதால் ஏற்பட்ட வேதனையை கொட்டித் தீர்த்துள்ளார்.

கரூர் விஜய் பேச்சு
கட்சித் தலைவராக இந்த ஆதங்கங்களை வெளிப்படுத்துவது சரிதான். ஆனால் ஒரு முதலமைச்சராகப் பேசும்போது இன்னும் சற்று பொறுப்புடனும், கண்ணியத்துடனும் பேசியிருக்கலாம்.. அந்தவகையில் இது ஓரளவுக்கு ஏமாற்றம் அளிக்கும் உரையாகவே உள்ளது.
விஜய் பேசும்போது, 'நாங்கள் பெரம்பலூர் போனபோது காவல்துறையினர் எங்களை எச்சரித்து அனுப்பினார்கள். ஆனால், கரூருக்கு வரும்போது காவல்துறை எங்களுக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல், வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று எங்களை ஏமாற்றி ஒரு நாடகம் ஆடிவிட்டார்கள்' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
போலீஸ் நாடகம் ஆடியது
தமிழ்நாட்டில் முதலமைச்சர்தான் காவல்துறையைத் தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அப்படி இருக்கும்போது, "போலீஸ் நாடகம் ஆடியது" என்று ஒரு முதலமைச்சர் எப்படிச் சொல்ல முடியும்? அதுமட்டுமல்ல, இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணையில் இருக்கிறது.
சிபிஐ இன்னும் ஓரிரு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்போகிறது.. அப்படியிருக்கும்போது, பொறுப்புள்ள முதலமைச்சர் "போலீஸ் சதி பண்ணிவிட்டது" என்று எடுத்த எடுபபிலேயே பேசுவது அரசியல் நெறிமுறைகளின்படி நெருடலாக இருக்கிறது.
வாக்குகளில் பெரிய சாதனையைச் செய்தவர், முதலமைச்சர் நாற்காலியின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் பேசியிருக்க வேண்டும்.
திமுகவின் தந்திரங்கள்
அதேநேரத்தில், திமுக செய்யும் தந்திரங்களும் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. முதல் நாளிலிருந்தே எப்படியாவது இந்த அரசை கவிழ்க்க வேண்டும் என்று பார்க்கிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள 10 பேர் மீதும் முறையான ஆதாரங்கள் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தப்பி ஓடியது, லுக்அவுட் நோட்டீஸ் கொடுத்தது என அரசை நிலை குலைய வைக்க முயற்சிகள் நடந்துள்ளன.
தனி மெஜாரிட்டி இல்லாத ஒரு அரசுக்கு "எப்பொழுது வேண்டுமானாலும் கவிழ்த்து விடுவார்களோ" என்ற பதற்றம் இருக்கும்.. அதுதான் விஜய்யின் இத்தகைய பேச்சுக்குக் காரணமாக இருக்கலாம்.
ஒரு முதலமைச்சர் இப்படி பேசலாமா
விஜய் தன் பேச்சின் இறுதியில் பெயர் சொல்லாமல் "திருட்டு திமுக" என்றும், "கரூர் கேங்" என்றெல்லாம் சாடியிருக்கிறார்.. தீய சக்தி என்று சொல்வது வேறு, ஆனால் திருட்டு திமுக போன்ற வார்த்தைகளை முதலமைச்சர் தவிர்த்திருக்கலாம்.
செந்தில் பாலாஜியைக் குறிப்பிட்டுப் பேசிய விஜய், "இன்னும் எத்தனை பேர் மாட்டப் போகிறார்களோ தெரியவில்லை" என்றார்.
"ஒவ்வொரு துறையிலும் கட்சி ஃபண்ட் வாங்குறாங்கன்னு நான் சட்டமன்றத்தில் பேச ஆரம்பித்தாலே, அவங்க எழுந்து ஓடிடுறாங்க. இனிமேல் அவங்க அப்படி ஓடாமல் இருக்கணும்னா, பேசுறதுக்கு முன்னாடி அவை கதவுகளை எல்லாம் இழுத்து மூடுங்கன்னு சபாநாயகர்கிட்டதான் கேட்கணும்" என்கிறார்
லஞ்சத்தை ஒழித்து விட்டோம்
அதேபோல நாங்கள் லஞ்சத்தை ஒழித்துவிட்டோம், ஒரு அரசு அலுவலகத்தில் கூட லஞ்சம் இல்லை என்று விஜய் அரசு தரப்பில் பேசப்படுகிறது. கீழ்மட்ட அளவில் லஞ்சத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கிறார்கள் என்று தகவல்கள் வந்தாலும், "ஊழலே முற்றிலுமாக ஒழிந்துவிட்டது" என்றெல்லாம் பேசுவது தவறான மற்றும் அபத்தமானது.
அதிமுகவை "தீய சக்தி, தீர்ந்துபோன சக்தி" என்று சாடுகிறார்.. ஆனால், அதிமுகவின் முக்கிய முகமான, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரை தன் பக்கத்திலேயே உட்கார வைத்துக்கொண்டே பேசுகிறார்.. இந்த கேள்விக்கு முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. அதற்கு காரணம், விஜய் அரசு கொண்டு வந்துள்ள புதிய ஊடகக் கலாச்சாரம் தான்.
முதலமைச்சர் விஜய்யோ அல்லது அவரது அமைச்சர்களோ செய்தியாளர்களை நேரில் சந்திப்பதில்லை. ஊடகங்களுடன் எந்தவொரு நேரடித் தொடர்பும் இல்லாததால், விஜய் இத்தகைய சங்கடமான கேள்விகளை எல்லாம் அப்படியே பைபாஸ் செய்து கடந்து போகிறார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications