திராவிட கட்சிகள் செய்த தவறு இதுதான்! விஜய்க்கு பிளஸ் ஆக மாறியது! போஸ் வெங்கட் ஆதங்கம்
சென்னை: நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், விஜய்யின் அரசியல் பயணத்தை ஆரம்பத்திலிருந்தே விமர்சித்தவர்களில் ஒருவர். "அவரால் நான்கு சீட் கூட வெல்ல முடியாது" என்று ஒருகாலத்தில் வெளிப்படையாக கூறியிருந்த போஸ் வெங்கட், இன்று அதே விஜய் தமிழக முதலமைச்சராக உயர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியும் பிரமிப்பும் அடைந்ததாக முன்பே கூறியிருந்தார்.
ஆனால் அதற்குப் பிறகும் விஜயின் அரசியல், ஆட்சி, அவரைச் சுற்றிய ரசிகர் மனநிலை குறித்து தனது கருத்துகளைத் தொடர்ந்து பகிர்ந்து வரும் போஸ் வெங்கட், இப்போது ரசிகர்களின் சில அநாகரிகமான செயல்கள் குறித்து வருத்தத்துடன் பேசியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

நடிகர் போஸ் வெங்கட் பேட்டி
சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் பேசியதாவது, "நானும் என் குடும்பமும் கோவிலுக்கு போனால் கூட சிலர் அருகே வந்து காதுக்கு பக்கத்தில் 'TVK' என்று கத்திட்டு போறாங்க. இதெல்லாம் கேட்க நல்லா இருக்கா? நான் எந்த இடத்திலும் விஜய்யை தனிப்பட்ட முறையில் இழிவாக பேசியதில்லை. அவருடைய கொள்கை இல்லாத அரசியல் தளத்தையே விமர்சித்தேன். அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த நிலையும், இப்போது இருக்கும் நிலையும் பற்றிதான் கருத்து சொன்னேன்.
அதற்கு பதிலாக கொள்கை ரீதியாக வாதம் செய்யலாம். நான் சொல்வது தவறு என்றால் தர்க்கரீதியாக எதிர்க்கலாம். ஆனால் அதை விடுத்து என் குடும்பத்தினரின் முன்னால் என்னை அவமானப்படுத்துவது, மனைவி-குழந்தைகள் குறித்து தவறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்" என்று கூறியுள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை
இந்த அனுபவங்கள் குடும்பத்தையே பாதித்துவிட்டதாகவும் போஸ் வெங்கட் குறிப்பிட்டார். "இதைப் பார்த்து என் மனைவியே, 'இனிமேல் நீ விஜய் பற்றியோ, தவெக பற்றியோ பேசாதே' என்று சொல்கிறார். ஆனால் நான் ஏன் பேசக்கூடாது? இது ஜனநாயக நாடு. எனக்கு என் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது. பேசக்கூடாது என்றால் நான் நாட்டை விட்டு போகணுமா? அது முடியாது. அதனால் நான் பேசுவேன். அதே நேரத்தில் அவர் செய்யும் நல்ல விஷயங்களை நான் பாராட்டவும் செய்கிறேன்" என்றார்.
திராவிட கட்சிகளின் மைனஸ்
விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் ஆதரவு குறித்தும் அவர் சுவாரஸ்யமான கருத்து தெரிவித்துள்ளார். "இன்று விஜய்க்கு இவ்வளவு பெரிய யூத் சப்போர்ட் இருக்கிறது என்றால், அதற்கு ஒரு காரணம் திமுகவும் அதிமுகவும் தான். அவர்கள் தங்களுடைய கொள்கைகளையும் அரசியல் புரிதலையும் இளைஞர்களிடம் சரியாக கொண்டு செல்லவில்லை.
கல்லூரி, பள்ளி நிலைகளிலேயே அரசியல் விழிப்புணர்வு உருவாக்கியிருக்கலாம். மாணவர்கள் மத்தியில் தேர்தல் கலாச்சாரம் வளர்த்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. கல்லூரிகளில் தேர்தல்கள் முறையாக நடந்திருந்தால், இளைஞர்களுக்கு அரசியல் பற்றிய புரிதல் இன்னும் ஆழமாக இருந்திருக்கும். அந்த வெற்றிடத்தில்தான் விஜய் போன்ற ஒருவர் மிக வேகமாக நுழைந்து பெரிய ஆதரவை பெற்றிருக்கிறார்" என்றார்.
ஒருகாலத்தில் விஜய்யின் வெற்றியை சாத்தியமே இல்லை என்று பார்த்த போஸ் வெங்கட், இன்று அவரது எழுச்சியை ஏற்றுக்கொண்டு பேசுவதும், அதே நேரத்தில் ரசிகர்களின் சில செயல்களை கண்டிப்பதும் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. கருத்து வேறுபாடு இருக்கலாம்; ஆனால் அது குடும்பத்தினரை அவமானப்படுத்தும் அளவுக்கு போகலாமா என்ற கேள்வியையும் இந்த பேட்டி மீண்டும் எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications