சென்னையில் சேகர்பாபு.. சேலத்தில் இபிஎஸ்.. ஒரே நாளில் பாஜகவை சம்பவம் செய்த திமுக அதிமுக
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதி மத்திய மண்டல பாஜகவினர் கொளத்தூர் பகுதி தலைவர் நந்தகோபால் தலைமையில் கூண்டோடு காலி செய்து, அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மொத்தமாக திமுகவில் இணைந்தனர். இதேபோல் கிருஷ்ணகிரியில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்பட எல்லா கட்சிகளுமே கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பிஸியாக உள்ளன. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, கொங்கு மக்கள் தேசிய கட்சி, முஸ்லீம் லீக்,இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அப்படியே தொடர்கின்றன

அதேநேரம் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சியை தவிர எந்த கட்சிகளும் கூட்டணியில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அதிமுக கூட்டடணியில் முன்பு இருந்த தேமுதிக, பாமக, புதிய தமிகம் போன்றவை இப்போது எந்த பக்கம் போக போகின்றன என்பது தெரியவில்லை.
பாஜக கூட்டணியை பொறுத்தவரை ஜிகே வாசனின் கட்சி பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. இது இல்லாமல் டிடிவி தினகரனின் அமமுக, அதிமுக ஒபிஎஸ் அணி, சசிகலா உள்ளிட்டோர் பாஜக உடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இதில் தேமுதிக, பாமக இரண்டையுமே பாஜக தனது கூட்டணியில் சேர்க்க தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அதிமுகவும் கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த களோபரங்களுக்கு நடுவே பாஜகவினர் சிலர் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. சென்னை கொளத்தூர் தொகுதி மத்திய மண்டல பாஜகவினர் கொளத்தூர் பகுதி தலைவர் நந்தகோபால் தலைமையில் கூண்டோடு கட்சியில் இருந்து விலகியதுடன் திமுகவில் இணைந்துள்ளனர். கொளத்தூர் தொகுதி மத்திய மண்டலத்தில் கொளத்தூர் பகுதி தலைவர் நந்தகோபால் தலைமையில் பாஜகவினர் அமைச்சர் சேகர்பாபு இன்று சந்தித்து தங்களை திமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
இதனிடையே சென்னையில் இப்படி என்றால், பா.ஜ.க. எஸ்.டி. பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணகிரி பாப்பண்ணா தனது ஆதரவாளர்களுடன், அதிமுகவில் இணைந்தார். கே.பி.முனுசாமி அழைப்பின் பேரில் சேலத்திற்கு சென்ற அவர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
கடந்த ஆண்டு ஈரோடு கிழக்கு தேர்தல் சமயத்தில் தமிழ்நாடு பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் என். விநாயகமூர்த்தி திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. விநாயகமூர்த்தி தலைமையில் ஈரோடு மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணிச் செயலாளர் வி.வெங்கடேஷ் - மதுரைவீரன், மக்கள் இளைஞர் அணிச் செயலாளர் பழ.வீரக்குமார் ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இதேபோல் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவிலும் இணைந்தனர். குறிப்பாக காயத்ரி ரகுராம், நிர்மல் குமார் உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications