8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 15 ரயில்கள் ரத்து.. திருவள்ளூர் ரயில் தீவிபத்து எதிரொலி.. முழு விவரம்
சென்னை: திருவள்ளூரில் டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ரயில் சேவை மொத்தமாக முடங்கியுள்ளது. இதற்கிடையே இந்த விபத்து காரணமாக விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள் என 15 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை, பெங்களூர் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை மணலியில் இருந்து டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக உராய்வு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் தீ ஒரு வேகனில் பரவிய நிலையில், பிறகு மெல்ல மற்ற வேகன்களுக்கும் பரவியிருக்கிறது. இதனால் அங்குப் பல மீட்டர் தூரத்திற்கு தீ கொழுந்துவிட்டு எரிகிறது.

ரயில் விபத்து
அந்த ரயிலில் மொத்தம் 52 வேகன்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது, அதில் இப்போது வரை 4 வேகன்களில் தீ பற்றி எரிந்து வருகிறது. மற்ற வேகன்களில் தீ பரவுவதைத் தடுக்க அவை தனியாகப் பிரிக்கப்பட்டன. டீசல் காரணமாக ஏற்பட்ட தீவிபத்து என்பதால் தண்ணீருக்குப் பதிலாகச் சிறப்பு நுரை (foam) மூலம் தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பல ரயில்கள் ரத்து
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தீ எரிந்து வருகிறது. இதனால் அங்கு ரயில்பாதையில் உள்ள ஒயர்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர்- அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் திருவள்ளூர் வரை ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட திருவள்ளூர்- அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications