முதல்வருக்கு பயம்.. எப்போது தீர்ப்பு வருமோ என்று அமைச்சர்களுக்கு அச்சம்.... எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: அமைச்சர்கள் பலர் எப்போது தீர்ப்பு வருமோ என்று அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து 12 தீர்மானங்கள் உள்பட மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆளும் திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக சாடினார். திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டது. அமைச்சர் ஒருவர் 5 மாத காலமாக சிறையில் இருக்கிறார். அவர் யாரென்று உங்களுக்கு தெரியும். இன்னொரு அமைச்சர் குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன் வரிசையில் இருக்கும் அமைச்சர்கள் பலரும் அஞ்சிக்கொண்டிருக்கின்றனர். எப்போது வழக்கில் தீர்ப்பு வருமோ என்று அச்சத்தில் இருக்கின்றனர். மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது திமுக அரசு என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும் என்றும் கூறினார்.
செந்தில் பாலாஜி புழல் சிறையில் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். ஒரு அமைச்சர் சிறையில் இருந்தால் அவரை அமைச்சராக பார்ப்பதா? கைதியாக பார்ப்பதா? அமைச்சர் என்றால் மரியாதை தர வேண்டும். கைதி என்றால் பிற கைதிகளோடு இருக்க வேண்டும். சட்ட நெறிமுறைப்படி ஆட்சி செய்ய நினைக்கும் முதல்வர் தார்மீக அடிப்படையில் அவரை பதவியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.
உயர்நீதிமன்றம் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தும் சிறையில் இருப்பவரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்காமல் இருக்கிறார். அதற்கு காரணம் அமைச்சரவையில் இருந்து விடுவித்த பின்னர் இவரை பற்றி சொல்லி விட்டால் அவருக்கு பதில் இவர் சிறைக்கு போய் விடுவார். முதல்வருக்கு பயம் இருப்பதனால்தான் மவுனம் காக்கிறார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications