முடி திருத்தும் தொழிளாளர்கள் உட்பட பல்வேறு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை
சென்னை: இதுவரை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கிவருவதைப் போல, அரசின் வாரியத்திலுள்ள அமைப்புச்சார தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகையாக ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கலெக்டர்களுடன் இன்று அவர் ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சலவைத் தொழிலாளர்கள் நலவாரியம், முடிதிருத்தும் தொழிலாளர் நல வாரியம், பனைமர தொழிலாளர் நலவாரியம், கைவினை தொழிலாளர் நலவாரியம், கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர் நலவாரியம், தோல்பதனிடும் தொழிலாளர் நலவாரியம், பொற்கொல்லர் தொழிலாளர் நலவாரியம், மண்பாண்ட தொழிலாளர் நலவாரியம், வீட்டு பணியாளர் தொழிலாளர் நலவாரியம், நெசவாளர் தொழிலாளர் நலவாரியம், சமையல் தொழிலாளர் நலவாரியம், கிராமிய கலைஞர்கள் நலவாரியம் ஆகியோருக்கும் ரூ.1000 பலன் கிடைக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என்பது குறைவாக இருக்கிறதே என்ற நிருபர்களின் கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்கையில், அரசின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். இயன்ற அளவுக்கான உதவிகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.