தமிழ்நாடு தேவலாம்.. 8 மணி நேர மின்வெட்டால் திணறும் வட மாநிலங்கள்.. என்ன நடக்கிறது? பரபர பின்னணி
சென்னை: வடமாநிலங்களில் மின் வெட்டு மிக மோசமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மின்வெட்டு உச்சம் தொட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் நேற்று முதல்நாள் 2-3 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
தமிழ்நாடு முழுக்கவே அந்த மின் வெட்டு பரவலாக இருந்தது. அதன்பின் நேற்று பெரும்பாலும் எங்கேயும் மின் வெட்டு ஏற்படவில்லை.

மின்தடை தமிழ்நாடு
ஒரு சில இடங்களில் மட்டும் சென்னையிலும், கரூரிலும் 1 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. ஆனால் ஒப்பீட்டளவில் நேற்று முதல்நாளை விட நேற்று மின் வெட்டு மிகவும் குறைவாகவே இருந்தது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் வராததே காரணம் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கத்தில், மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.

மின்தடை
இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டார்.

நிலக்கரி தட்டுப்பாடு
அதே சமயம் நிலக்கரி தட்டுப்பாட்டால் வடமாநிலங்களில் மின் தடை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின் வெட்டுக்கள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் 8 மணி நேரம் கூட மின் வெட்டு ஏற்பட்டுள்ளதால் ndtv ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. தென்னிந்தியாவில் ஆந்திர பிரதேசத்தில்தான் மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

குஜராத்
குஜராத்தில் பொதுவாக தொழிற்சாலைகள் 7 நாட்களும் இயங்கும். ஆனால் அங்கு மின்சார தட்டுப்பாட்டால் கடந்த 1 மாதமாக தொழிற்சாலைகளுக்கு வாரம் 1 நாள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்தியாவில் மின் தேவையில் 70 சதவிகிதத்தை பூர்த்தி செய்வது என்னவோ நிலக்கரிதான். இந்தியாவிற்கு ஏப்ரல் முதல் வாரம் 453 வேகன்ஸ் நிலக்கரி தேவை. ஆனால் இருந்தது என்னவோ 379 வேகன்ஸ் மட்டுமே. இதை வரும் நாட்களில் உயர்த்த வேண்டும். நிலக்கரி தேவை 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

முக்கிய காரணம்
இதுதான் மின் தடைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ரஷ்ய போர் காரணமாக நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது, அதேபோல் பொதுவாகவே வெயில் காலங்களில் நிலக்கரி கிடைப்பது குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. வடமாநிலங்களில் மின் தடை காரணமாக பல்வேறு தொழிற்சாலைகள் கடுமையாக முடங்கி உள்ளன. 12 மாநிலங்களில் இருக்கும் நிலக்கரியை வைத்து இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும் என்று ஆல் இந்தியா பவர் எஞ்சினியர் பெடரேஷன் தலைவர் சைலேந்திர துபே தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம்
குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த மின் தடையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி உள்ளிட்ட தேசிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட், ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார், தெலுங்கானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான மின் தடை ஏற்படும். அதிலும் ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மின் தடை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications