தமிழகத்தின் பல பகுதிகளில் திடீரென கொட்டித்தீர்த்து குளிர்வித்த மழை.. சென்னைக்கு மட்டும் ஓரவஞ்சனை!
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று பிற்பகலுக்கு பிறகு பரவலாக நல்ல மழை கொட்டித்தீர்த்து வருகிறது. ஆனால் சென்னையில் மட்டும் ஒரு சிறு தூறல் கூட இல்லாதது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
மழையே இல்லாமல் தொடர்ந்து வெயில் சுட்டெரிப்பதால் தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவ்வப்போது தமிழகத்தின் பல பகுதிகளிலும் திடீர் திடீரென கோடை மழையும் பெய்து வருகிறது.

குளிர்ந்த காற்று
இதனால் தண்ணீர் பஞ்சம் தீரா விட்டாலும் வெயிலுக்கு சற்று இதமாக உள்ளது. கொளுத்தும் வெயிலுக்கு சற்று ஓய்வளித்து குளிர்ந்த காற்றை சுவாசிக்க வழிசெய்கிறது இந்த மழை.

சென்னையில் இதுவரை இல்லை
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்தாலும் சென்னையில் மட்டும் இதுவரை கோடை மழை தனது கணக்கை தொடங்கவில்லை. சில நேரங்களில் மேகமூட்டம் மட்டும் திரண்டு வந்து போக்குகாட்டி செல்கிறது.

ஏமாறும் சென்னை மக்கள்
மழை பெய்தால் தண்ணீர் தட்டுப்பாடு சற்று குறையும் என்பதால் மழை இன்று வரும், நாளை வரும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்துள்ளனர் சென்னை மக்கள். இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று பிற்பகலுக்குப் பிறகு பரவலாக இடியுடன் நல்ல மழை பெய்து வருகிறது.

மழையால் மக்கள் மகிழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் அரைமணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. வெயில் சுட்டெரிக்கும் நிலையில் அரைமணி நேரமாக பெய்த கனமழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர், பெரம்பலூர்
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பெரம்பலூர், பேரளி, சித்தளி, ஒதியம், குன்னம், எசனை, வேப்பந்தட்டை, அந்தூர், மேலமாத்தூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

பலத்த சூறைக்காற்று
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதேபோல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், புதுப்பாளையம் ஆகிய இடங்களிலும் பலத்த சூறைக்காற்று இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

கிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் மழை
கிருஷ்ணகிரி மாவட்டம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை நகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இடியுடன் கூடிய கனமழை
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதகாவும் வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications