சென்னைக்கு இணையாக மாறுது.. திருச்சி மக்கள் எதிர்பார்க்காத பெரிய நல்ல செய்தி.. மெட்ரோ ரூட் இதுதான்
சென்னை: சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள் தொடங்க உள்ளன. அதாவது திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ரோ தொடங்கப்பட உள்ளது. இதில் திருச்சியில் தொடங்கப்பட உள்ள மெட்ரோவில் மேப் வெளியாகி உள்ளது.
சேலம், திருநெல்வேலியில் மெட்ரோ லைட் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில்தான் மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் பெருந்திரள் மற்றும் துரித போக்குவரத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (Detailed Feasibility Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான மு.அ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் சென்னை, நந்தனதில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் இன்று (31.08.2023) சமர்பித்தார்.

தற்போது சென்னையில் மெட்ரோ இரயில் துரித போக்குவரத்து சேவையை மக்களுக்கு வழங்கிவருகிறது. அதே போல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகராட்சிகளிலும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும் மற்றும் விரைவாக்கும் வகையிலும் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சாத்தியக் கூறு ஆய்வின் மூலம் திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகராட்சிகளுக்கு உகந்த துரித போக்குவரத்து முறை மற்றும் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கு உகந்த வழித்தடங்கள் இந்த சாத்தியக் கூறு அறிக்கையில் கண்டறியப்பட்டன. அதன்படி போக்குவரத்துத் திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருச்சிராப்பள்ளி: திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சமயபுரம் முதல் வயலூர் வரை 19 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 26 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 26 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் வழித்தடங்களில் 2 45 கி.மீ நீளத்திற்கு 45 நிலையங்கள்கண்டறியப்பட்டுள்ளன.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் பேட்டை முதல் சங்கனாபுரம் வரை 12.39 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 13 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், பாளையம்கோட்டை முதல் பொன்னாக்குடி வரை 12.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 12 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், சங்கர்நகர் முதல் வசந்தநகர் வரை 14.65 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 3-ல் 15 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 3 வழித்தடங்களில் 39.07 கி.மீ நீளத்திற்கு 40 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சேலம்: சேலம் மாநகராட்சியில் கரபுரநாதர் கோவில் முதல் அம்மாபேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணம் இரயில் நிலையம் வரை 17.16 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், கருப்பூர் முதல் சேலம் இரயில் நிலையம் சந்திப்பு வழியாக நல்லிகலப்பட்டி வரை 18.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 2 வழித்தடங்களில் 35.19 கி.மீ நீளத்திற்கு 38 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

திருச்சி மெட்ரோ: இதில் திருச்சி மெட்ரோ சென்னைக்கு நிகராக அமையும். இரண்டு கட்டமாக, இரண்டு பாதைகளில் சென்னை போலவே இங்கே மெட்ரோ அமைக்கப்படும். திருச்சி மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டத்தை (எம்ஆர்டிஎஸ்) அறிமுகப்படுத்துவதற்காக விரிவான சாத்தியக்கூறு அறிக்கையில் (டிஎஃப்ஆர்) 45 கிமீ நீளம் கொண்ட இரண்டு காரிடர் மெட்ரோ அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஒரு காரிடர் நகரின் வடக்கு மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளை இணைக்கும், மற்றொன்று நகரின் கிழக்கு மற்றும் தெற்கு புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அடுத்த 30 ஆண்டு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இந்த பெருந்திரள் துரித கால போக்குவரத்து உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மாற்றம் வரலாம். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், (திட்டங்கள்), தலைமை பொது மேலாளர்கள் திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), திருமதி. ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications