மார்ச்சில் 'பிகே' கொடுக்க போகும் ரிப்போர்ட்.. காத்திருக்கும் ஸ்டாலின்.. திமுக எடுக்கும் அஸ்திரம்!
2021 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான முதற்கட்ட திட்ட அறிக்கையை தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அடுத்த மாதம் திமுகவிடம் சமர்பிக்கிறார்.
சென்னை: 2021 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான முதற்கட்ட திட்ட அறிக்கையை தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அடுத்த மாதம் திமுகவிடம் சமர்பிக்கிறார். இதில் முக்கிய திட்டம் ஒன்றை அவர் திமுகவிற்கு அளிக்க உள்ளார்.
தமிழகம் 2021 சட்டசபை தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழகத்தில் திமுகவிற்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் ஆலோசகராக இருக்கிறார் . கடந்த நவம்பர் மாதம்தான் இவர் அதிகாரபூர்வமாக திமுகவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இவர் திமுகவிற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் இவர் கொடுத்த திட்டங்கள் திமுகவிற்கு பெரிய அளவில் உதவியது குறிப்பிடத்தக்கது.

திமுக எப்படி
இந்த நிலையில் 2021 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான முதற்கட்ட திட்ட அறிக்கையை தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அடுத்த மாதம் திமுகவிடம் சமர்பிக்கிறார். திமுகவின் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்ட பின், அவர் திமுகவின் மூத்த தலைவர்கள் உடன் ஆலோசனை செய்தார். திமுகவின் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உடன் ஆலோசனை செய்தார்.

டீம் என்ன சொன்னது
அதேபோல் தன்னுடைய அரசியல் அணியிடமும் பிரசாந்த் கிஷோர் திமுக தொடர்பான முக்கிய நிலவரங்களை ஆலோசித்துள்ளார். தமிழக களநிலவரம் குறித்தும், எதை மையமாக வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை செய்துள்ளார். இதில் பல்வேறு தகவல்கள், புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டு இருக்கிறது. திமுகவின் சாதனைகள் தொடர்பான புள்ளி விவரங்கள் இதில் திரட்டப்பட்டுள்ளது.

முக்கிய திட்டம்
அதன்படி மூன்று விஷயங்களை செய்தால் திமுகவிற்கு வெற்றி எளிதாகும் என்று பிரசாந்த் கிஷோர் அறிவுரை வழங்கி இருக்கிறார். முதலாவது திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது, சென்னை வெள்ளம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு உட்பட அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை மக்களிடம் கொண்டு செல்வது என்று இரண்டு விஷயங்களை கூறியுள்ளார்.

மூன்று என்ன
இதில் மூன்றாவது விஷயம்தான் முக்கியம். அதன்படி திமுக தற்போது கிராமங்களில் அதிக இடங்களை பெறுவது இல்லை. கிராமங்களில் இப்போதும் அதிமுகதான் கிங். அதனால் கிராமங்களை கவரும் வகையில், ஊர்புற கடவுள் வழிபாட்டை முன்னிறுத்தி திமுக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது குல தெய்வங்கள், தமிழ் கடவுள்களை முன்னிறுத்தி வாக்குகளை அள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏன் இப்படி
அதிமுக பாஜக கூட்டணியின் இந்துத்துவா அரசியலையும், ரஜினியின் ஆன்மீக அரசியலையும் எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும் என்று திமுகவிற்கு பிரசாந்த் கிஷோர் அறிவுரை வழங்கி உள்ளார். அதோடு மக்கள் பிற மாநிலத்தில் பிரபலமாக இருக்கும் இந்து கடவுள்களை விட, தங்கள் குல தெய்வம் மீது அதிக பக்தி கொண்டு இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை திமுகவிற்கு சாதகமாக பயன்படுத்த பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளார்.

இதுதான் அஸ்திரம்
இந்த உள்ளூர் ஆன்மீக அரசியல்தான் பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கு கொடுக்க உள்ள அஸ்திரம் என்கிறார்கள். இதற்கான திட்ட அறிக்கையை பிகே அடுத்த மாதம் அளிப்பார். இதனால்தான் இப்போதே, ஒருவர் எந்தக் கடவுளையும் வணங்கலாம்; எந்தக் கோவிலுக்கும் போகலாம்; எந்த உணவையும் சாப்பிடலாம். நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை, இந்துத்துவாவிற்கு எதிரானவர்கள் என்று ஸ்டாலின் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications