ஒளிப்பதிவாளராக ஆசைப்பட்ட மகன்! சினிமாவே வேண்டாம் என்று எம்.பி.ஏ. படிக்க வைத்த மாரிமுத்து!
சென்னை: குணசித்திர நடிகர் மாரிமுத்து காலமானார் என்ற செய்தி தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் கோடான கோடி குடும்பங்களுக்கு பரிச்சயமானவர் மாரிமுத்து. இவரது பேச்சும், உடல் மொழியும் அவருக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

சினிமாத்துறையில் 30 ஆண்டுகாலம் பயணித்து கிடைக்காத பெயரும், புகழும் எதிர்நீச்சல் என்ற சீரியல் மூலம் அவருக்கு கிடைத்தது. திரைப்படங்களை இயக்கிவிட்டு, நடித்துவிட்டு, தொலைக்காட்சி தொடர்களின் நடிப்பதா என்ற கேள்வியுடன் தான் இயக்குநர் திருச்செல்வத்திடம் கதைக் கேட்கச் சென்றிருக்கிறார் மாரிமுத்து.
இயக்குநர் திருச்செல்வம் கூறிய கதையையும், கதாபாத்திரங்களையும் கேட்டு அந்த இடத்திலேயே எதிர்நீச்சல் தொடரில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு வந்தார் மாரிமுத்து. தன்னைப் போல் தனது மகன் சினிமா துறையில் கஷ்டப்படக் கூடாது என்பதால் அவரை அந்தப் பக்கமே எட்டிப்பார்க்கவிடவில்லை.

ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று மகன் ஆசைப்பட்ட போது அவரை அழைத்துப் பேசி, கோவைக்கு அனுப்பி பிரபல கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்க வைத்தார். இப்போது மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியத்தில் மாரிமுத்துவின் மகன் பணியாற்றி வருகிறார். மகனுக்கு திருமணம் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்ட நிலையில் தான் எதிர்பாராதவிதமாக மரணத்தை தழுவியுள்ளார்.
கலைஞர்களுக்கு ஏது மரணம் என்பது போல் காலத்தால் அழியாத சுவடுகளை திரைப்பயணத்தில் விட்டுச் சென்றிருக்கிறார் இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து.












Click it and Unblock the Notifications