மெரினா கடற்கரையை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது.. கடை எண்ணிக்கையை குறையுங்கள்.. ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உணவு பொருட்கள், பொம்மைகள், ஃபேன்சி பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து, வேறு எந்த கடைகளையும் அமைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் எம்டி ஜெகதீஷ் சந்திரா அமர்வு விசாரணை செய்தது. இதன்பின் டிசம்பர் 22ஆம் தேதி மெரினா கடற்கரையையும் நீதிபதிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், உலகின் 2வது நீளமான கடற்கரையான மெரினா கடற்கரையில் ஒரு பகுதி நீலக்கொடி சான்று பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 பகுதிகளை நீலக்கொடி சான்று பகுதியான அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறமுள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்கப்படும் இடங்களில் எந்த கடைகளையும் அமைக்க கூடாது. உழைப்பாளர் சிலையின் பின்புறம் அமைந்துள்ள நிரந்தர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற வேண்டும். உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் இல்லை. சாலையில் இருந்து கடலின் அழகை ரசிக்க முடியாத அளவிற்கு கடைகள் மறைக்கிறது.
தற்போது உள்ள 1,417 கடைகள் அமைப்பது என்ற திட்டத்தை மறு ஆய்வு செய்து கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். உணவு பொருட்கள், பொம்மைகள், ஃபேன்சி பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மற்ற கடைகள் தேவையில்லை. கடற்கரை மக்கள் ரசிக்க தானே தவிர, ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது.
அதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடற்கரையை ரசிக்க கடைகள் இடையூறாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். தொடர்ந்து கடைகளின் எண்ணிக்கையை குறைத்து புதிய திட்டத்தை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு அவகாசம் அளித்து வழக்கின் விசாரணை ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications