மொழிப்போரில் உயிர் தியாகம் செய்தோருக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம்
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியைக் கண்டித்து, 1938இலும், 1965இலும் நடைபெற்ற மொழிப் போரில் உயிரீகம் செய்த ஈகியரின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25 அன்று கடைபிடிக்கப்படுகின்றது.
அந்நாளை, மொழி - இனம் காக்க சூளுரைக்கும் நாளாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் கட்சி ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்கிறது. நேற்று தமிழ்நாடெங்கும் மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
திருச்சியில் - உழவர் சந்தை திடலிலிருந்து உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் அமைந்துள்ள மொழிப்போர் ஈகியர் கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்களுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதேபோல், தஞ்சையில் பனகல் கட்டிடம் அருகில் மொழிப்போர் ஈகியரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மெழுகுதிரி கொளுத்தி வணக்கம் செலுத்தப்பட்டது.
சென்னை வள்ளலார் நகர் - மூலக்கொத்தளம் இடுகாட்டில் அமைந்துள்ள மொழிப் போர் ஈகிகள் தாளமுத்து, நடராசன், டாக்டர் தருமாம்பாள், மயிலை சிவமுத்து ஆகியோரது நினைவிடங்களில், வீரவணக்கம் செலுத்தும் வகையில், 25.01.2022 அன்று காலை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகிலிருந்து, மூலக்கொத்தளம் இடுகாடு வரை பேரணியாகச் சென்று தமிழுரிமைக் கூட்டமைப்பு தலைவர் புலவர் இரத்தினவேலவர், தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதேபோல், சிதம்பரம், முருகன்குடி, புதுச்சேரி, குடந்தை, புளியங்குடி, மதுரை, செங்கிப்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.