"நிபந்தனையற்ற ஆதரவு.." அதிமுகவுக்கு மருதநாட்டு மக்கள் கட்சி முழு ஆதரவு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், மருத நாட்டு மக்கள் கட்சி அதிமுகவுக்கு தங்கள் முழு ஆதரவை அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்டார். மொத்தமாக ஏழு கட்டமாகத் தேர்தல் நடக்கும் நிலையில், இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது.

இன்னும் சுமார் 4 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இங்கே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்கள் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த லோக்சபா தேர்தலில் தேசியளவில் பாஜகவுக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கிறது.
லோக்சபா தேர்தல்: அதேநேரம் தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் பிரதான போட்டி இருக்கிறது. இதில் திமுக கூட்டணி ஏற்கனவே தொகுதிப் பங்கீடு வரை அனைத்தையும் முடித்துவிட்டன. அங்கே கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் வேட்பாளர்களைக் கூட அறிவித்துவிட்டன. இருப்பினும், அதிமுக கூட்டணியில் நிலைமை அப்படி இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தையே முடியாமல் இருந்தது.
இதற்கு முன்பு லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து எதாவது கேள்வி கேட்டால்.. ஏன்ப்பா அவசரம்.. இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கவில்லை.. அதுக்குள் கூட்டணினா எப்படி.. இதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு வந்ததும் கூட்டணியை அறிவிப்போம் என்பதே அதிமுக தலைவர்களின் பதிலாக இருந்தது. இப்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி குறித்த நடவடிக்கைகளை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளன.
மருத நாட்டு மக்கள் கட்சி: இதற்கிடையே லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மருத நாட்டு மக்கள் கட்சி அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த மருத நாட்டு மக்கள் கட்சி நிர்வாகிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. தேர்தல் நெருங்க நெருங்க மேலும் பல கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று அதிமுக தலைவர்கள் கூறியுள்ளனர்.
கூட்டணி கணக்கு: அதிமுகவைப் பொறுத்தவரைக் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை எடுக்க முடியாமல் கடுமையாகத் திணறிக் கொண்டு இருக்கிறது. தேமுதிகவுடன் உடனான பேச்சுவார்த்தையை அதிமுக தீவிரமாக நடத்தி வருகிறது. தேமுதிக 7 சீட்களை கேட்டதாகவும் இருப்பினும் அதிமுக அதற்குச் சம்மதிக்கவில்லை. மேலும், தேமுதிக தரப்பில் ஒறு 1 ராஜ்ய சபா சீட்டும் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
அதேபோல மறுபுறம் பாமக உடனும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும், தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. வரும் நாட்களில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை அதிமுக அறிவிக்கும் எனத் தெரிகிறது.
லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் வரும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதியும் நடைபெறுகிறது. 4ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 13இல் நடக்கிறது., 5ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதியும் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும் நடக்கிறது. கடைசிக் கட்ட தேர்தல் மட்டும் வரும் ஜூன் 1ஆம் தேதி நடக்கும் நிலையில், வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்












Click it and Unblock the Notifications