சூரப்பாவுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்... டிஸ்மிஸ் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போர்க்கொடி..!
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
மாநில அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசிற்கு நிதி விவகாரம் தொடர்பாக சூரப்பா எப்படி கடிதம் எழுதலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வினவியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நிதிப் பங்களிப்பு
மத்திய அரசால், அண்ணா பல்கலைக் கழகத்தின் நான்கு வளாகங்கள், உயர் சிறப்பு கல்வி நிறுவனம் என அறிவிக்கப்பட்டால் ரூ.1000 கோடி நிதி கிடைக்கும். ஆனால், மத்திய அரசின் நெறிமுறைகளையே பின்பற்ற வேண்டும். மேலும், இதற்கு மாநில அரசும் இணையாக நிதிப் பங்களிப்புச் செலுத்த வேண்டும். மத்திய அரசின் நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் பின்பற்றினால், மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டை அமலாக்க முடியாது.
வெளிநாட்டு ஆசிரியர்கள்
உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் என்று குறிப்பிடுவதே கல்வி வணிகமய, தாராளமய நடவடிக்கையின் வெளிப்பாடாகும். உயர் சிறப்புக் கல்வி நிறுவனத்திற்கான மத்திய அரசின் நெறிமுறைகள் வெளிநாட்டு ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்ய வழிவகுக்கிறது, இதனால் இந்தியாவில் உள்ள சிறந்த ஆசிரியர்களின் வாய்ப்புகளும் பறிபோகும்.
கல்விக்கட்டணம்
ஏற்கனவே நீட் தேர்வின் மூலமாக தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகளை பாழாக்கிய மத்திய அரசு, தற்போது பொறியியல் கல்வியிலும் கைவைக்கிறது. மத்திய அரசின் நெறிமுறைகள் அமலானால் அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டு, ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுடைய பொறியியல் கல்வி கேள்விக்குறியாகும்.
டிஸ்மிஸ் செய்க
இந்த நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மாநில அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார். மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும் கல்விக்கட்டணம் உள்ளிட்டு பல்வேறு வகைகளில் நிதி திரட்டிக்கொள்ளலாம் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசிற்கு கடிதம் எழுத, துணைவேந்தருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவ்வாறு செயல்பட்ட துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக பதவியிலிருந்து நீக்கிட வேண்டும்.
2-ஆக பிரிக்காதீர்
அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிப்பது என்ற முடிவினை மாநில அரசு கைவிடுவதுடன். உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் என்ற மத்திய அரசின் முடிவையும், மத்திய அரசின் நெறிமுறைகளையும் ஏற்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.