2 லட்டுகள்.. பிடிஆர் சொல்ல சொல்ல.. அப்படியே பூரித்த அன்பில் மகேஷ்.. ஸ்மார்ட் கிளாஸுக்கு ரூ.1300 கோடி
பள்ளிக்கல்வி துறைக்கு நிதியமைச்சர் நிதியை ஒதுக்கி அறிவித்துள்ளார்
சென்னை: அரசுப்பள்ளிகளில் தேவையான கட்டமைப்பை அதிகரிக்கத் திட்டம் உள்ளதாகவும், திறன்மிகு வகுப்பறைகள் எனப்படும் ஸ்மார்ட் கிளாஸ் கட்ட ரூ.1300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் 2 முக்கியமான அறிவிப்பை நிதியமைச்சர் பிடிஆர் இன்று பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்..
2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்த நிலையில், 2022-23-ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது திமுக அரசு.

வேலுமணி
சட்டசபையில் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிதியமைச்சர் பிடிஆர்... உடனே ஜெயக்குமார் கைது, வேலுமணி வீட்டில் நடைபெற்ற ரெய்டு தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்... பிறகு வெளிநடப்பும் செய்தனர்.. இதனால் அமைச்சர் பிடிஆர் தன்னுடைய உரையை சிறிது நேரம் நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று. பிறகு பட்ஜெட் உரையை தொடர்ந்து வாசித்தபோது, அதில், பல முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஸ்மார்ட் கிளாஸ்
அந்தவகையில், அரசுப்பள்ளிகளில் தேவையான கட்டமைப்பை அதிகரிக்கத் திட்டம் உள்ளதாகவும், திறன்மிகு வகுப்பறைகள் எனப்படும் ஸ்மார்ட் கிளாஸ் கட்ட ரூ.1300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் இன்று அறிவித்திருக்கிறார்.. இப்படித்தான், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அடிப்படை கட்டமைப்புக்கு நிறைய நிதி ஒதுக்க வேண்டும் என்று பிடிஆரிடம், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை வைத்திருந்தார்.

சலுகைகள்
அந்த கோரிக்கையை ஏற்று, பல்வேறு சலுகைகளையும், திட்டங்களுக்கான நிதியையும் அப்போதைய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார் பிடிஆர்.. குறிப்பாக, ரூ.10 கோடியில் 25 கலை அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும், மலைப்பாங்கான தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப் பள்ளிகள் புதிதாக அமைக்கப்படும், 865 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்பன உட்பட ஏராள அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.

சிறப்பு திட்டங்கள்
இந்த முறையும் அதற்கேற்றவாறு பள்ளிக்கல்வி துறைக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.. கடந்த டிசம்பர் மாதம், திருச்சி மாநகரில் அரசு உதவி பெறும் பள்ளியின் பாத்ரூம் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உடல்நசுங்கி உயிரிழந்த சோகம் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது.. இதுகுறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், "மிகவும் சங்கடத்துடன் இருக்கிறேன்... மாணவர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது... நான் பள்ளிகளுக்கு செல்லும்போதெல்லாம் கழிவறையை தான் முதலில் பார்ப்பேன்...

கவனம்
அரசுப்பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் விரைவில் மேம்படுத்தப்படும். கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் சரி செய்யப்படும். அதேபோல, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கலாசாரம், பண்பாடு, நாகரீகம், கலை ஆகியவற்றை கற்றுத்தர அரசுப்பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முதல்வருடன் கலந்து பேசி அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.

ஒதுக்கீடு
அந்த வகையில், இன்று பிடிஆர் தன்னுடைய உரையில், பட்ஜெட்டில் 36,895.89 கோடி ரூபாய் பள்ளிக்கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.. மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.. 38 மாவட்டங்களில் 1.8 லட்சம் தன்னார்வலர்களால் செயல்படுத்தப்படுகிறது.. இதனால் 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.. இதற்காக வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஸ்மார்ட் வகுப்பறைகள்
இதைதவிர, அறிவியல், தொழில்நுட்பம், கலை, மருத்துவம் துறையில் மேம்பட, பின்தங்கிய 10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும்.. மேலும் 15 மாவட்டங்களில் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும், இதற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.. அரசு பள்ளிகளை மேம்படுத்த பேராசிரியர் அன்பழகன் திட்டம் செயல்படுத்தப்படும்.. ஸ்மார்ட் வகுப்பறைகள், கணிணி வகுப்புகள் என பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 1,300 கோடி செலவு செய்யப்படும்.. அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.14 கோடி செலவில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications