திருவள்ளூர் அருகே கொழுந்து விட்டு எரியும் ரயில்.. சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னை: திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், புறநகர் மின்சார ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் வானுயர கரும்புகை எழுந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி தருகிறது. இந்த தீயை அணைக்க தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர்.

சென்னை எண்ணூரில் இருந்து மும்பைக்கு எண்ணெய் ஏற்றிக் கொண்டு, 52 டேங்கர்களுடன் சென்று கொண்டிருந்த ரயிலில், திடீரென டேங்கர் பெட்டி ஒன்றில் தீப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த பெட்டிகளில் தீ பரவிக் கொண்டிருக்கிறது. கரும்புகை எழுந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி தருகிறது.
இதனால் இந்த விபத்து நடந்த இடத்தை சுற்றிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையான மூச்சு திணறல், கண் எரிச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், அரக்கோணம் மார்க்கத்தில் சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரலில் இருந்து ஆவடி வரை மட்டுமே புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் நலன் கருதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு 10க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications