பிரேமலதா வந்துசென்ற அடுத்த நாளே.. ஸ்டாலினை வீடு தேடி வந்து சந்தித்த வைகோ.. பாஜகவுடன் உறவு இல்லையாம்!
சென்னை: முதல்வர் ஸ்டாலினுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரின் மகன் துரை வைகோ ஆகியோர் சந்தித்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜாகி இருக்கும் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரிக்க அவரின் வீட்டிற்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்த அடுத்த நாளே, வைகோ வந்திருப்பதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற பல்வேறு கட்சிகளும் விரும்பி வருகின்றன. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்க்கப்பட்டனர். கடந்த 7 ஆண்டுகளாகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் யாருமே ஸ்டாலின் முன்னிலையில் சேர்க்கப்படவில்லை.

திடீரென மதிமுக நிர்வாகிகள் சேர்க்கப்பட்டதற்குத் துரை வைகோவின் செயல்பாடுகளே காரணம் என்று பார்க்கப்படுகிறது. பாஜகவுடன் துரை வைகோ நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக, திமுக ஒரு எச்சரிக்கை கொடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அதேபோல் மதிமுக கூட்டணியில் இருந்து விலகினால், அந்த இடத்தை தேமுதிகவை வைத்து நிரப்பவும் திமுக திட்டமிட்டது.
இந்த நிலையில் நேற்று காலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். அவரின் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக ஸ்டாலினை சந்தித்திருப்பதற்குப் பின் கூட்டணி கணக்குகள் இருக்கலாம் என்று பேசப்பட்டது.
தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துரை வைகோ இருவரும் ஸ்டாலின் அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துள்ளனர். இதன் மூலமாக திமுக கூட்டணியில் மதிமுக தொடர விரும்புவதாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 20 நிமிடங்கள் வரை நடந்த இந்த சந்திப்புக்குப் பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தேன்.
அவர் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தபடி அரசுப் பணிகளை மேற்கொண்டார். திமுகவின் முப்பெரும் விழா செப்.17ல் கரூரில் நடத்த உள்ளதாக தெரிவித்தார். மதிமுக சார்பாக அண்ணாவின் பிறந்தநாளான செப்.15ல் விழாவைத் திருச்சியில் நடத்துகிறோம். அதேபோல் நெல்லை கவின் ஆணவ படுகொலை விவகாரத்தில் காவல்துறை தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கவின் உடலைப் பெற மறுத்த பெற்றோருடன் கனிமொழி பேசி இருக்கிறார். ஆணவ கொலைகளுக்கு காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் கூட, கடுமையான சட்டங்கள் தேவை என்று கூறினேன். முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் மக்கள் திரள்கிறார்கள். 2026ல் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் பிடிக்கும். நிச்சயமாகக் கூட்டணி அரசு அமையாது.
அதேபோல் திமுகவில் இருந்து மதிமுக வெளியேறுவதாக சில ஊடகங்கள் அபாண்டமாக செய்திகளை வெளியிடுகின்றன. இந்துத்துவ சக்திகளை எதிர்க்கும் நிலைப்பாட்டில் எக்காரணம் கொண்டு மாற்றம் இருக்காது. பாஜகவுடன் இம்மியளவும் மதிமுக உறவு வைத்துக் கொள்ளாது. ஓபிஎஸ் முதல்வரை சந்தித்ததில் அரசியல் இருப்பதாக கருதவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications