எல்லாம் துரை வைகோவுக்காக.. துரோகி பட்டம் கொடுத்து வெளியேற்ற முயற்சி.. மல்லை சத்யா ஆவேசம்!
சென்னை: மதிமுகவில் துரோகி பட்டம் கொடுத்து வைகோ தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா குற்றம்சாட்டியுள்ளார். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக தனக்கு துரோகி பட்டம் கொடுப்பதாகவும் கூறி இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் மல்லை சத்யா இடையில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக துரை வைகோ கட்சிப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து வைகோ உள்ளிட்ட மதிமுக மூத்த நிர்வாகிகள் தலையிட்டு இருவருக்கும் இடையில் சமாதானம் செய்தனர். தற்போது மீண்டும் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

வைகோ பேட்டி
அதேபோல் இம்முறை மல்லை சத்யா மீது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். குறிப்பாக, பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல், எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார். இதனால் மதிமுகவில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. கடந்த காலத்தில் செஞ்சி கணேசன் உள்ளிட்டோர் வெளியேறிய போதும் நெருக்கடி ஏற்படவில்லை.
மல்லை சத்யாவுடன் பயணம்
யார் கட்சியில் இருந்து வெளியேறினாலும் அது பின்னடைவை ஏற்படுத்தாது. மல்லை சத்யா மதிமுகவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பது வருத்தமளிக்கிறது. மல்லை சத்யா போன்று பட்டியலின பிரதிநிதித்துவம் மதிமுகவில் பலருக்கு வழங்கியுள்ளேன். மல்லை சத்யா பல காலம் எனக்கு துணையாக இருந்தார்.
குற்றச்சாட்டு
அதனை நான் எத்தனையோ முறை பல இடங்களில் பெருமையாக பேசி இருக்கிறேன். ஆனால் சமீப காலமாக அப்படி இல்லை. மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை. மல்லை சத்யா மீது வரும் விமர்சனங்கள் தொடர்பாக நிர்வாகக் குழு கூட்டத்தில் பதிவு செய்தேன் என்று தெரிவித்தார். வைகோவின் இந்த குற்றச்சாட்டுகள் அக்கட்சியினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மல்லை சத்யா பதிலடி
இந்த நிலையில் வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கு மல்லை சத்யா பதில் அளித்தார். அதில், மதிமுகவில் துரோகி பட்டம் கொடுத்து தன்னை வெளியேற்ற பார்க்கிறார் வைகோ. குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் அளிக்கிறார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை, துரோகி என்று சொல்லும் அளவிற்கு துணிந்துவிட்டார்.
இரண்டாக பிரியும் மதிமுக?
வைகோவின் இந்த வார்த்தையை என்னால் தாங்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். இதனால் மதிமுக இரண்டாக பிரிகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், மதிமுகவில் உருவாகியுள்ள சிக்கல் அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications