"சகோதரர் ஸ்டாலினின் சிறப்பான ஆட்சி.. இவர்களுடன்தான் எங்கள் கூட்டணி".. வைகோ பளிச்
பாஜக யாருடன் கூட்டணி என்பதை 2 நாளில் அறிவிப்பதாக கூறியுள்ளது
சென்னை: இப்போது புதிதாக பதவி ஏற்க இருக்கும் ஆளுநர், முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்த தவறை செய்ய மாட்டார் என்று தான் நினைப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. அத்துடன், வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றியும் வைகோ தெளிவுபடுத்தி உள்ளார்.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.. அதற்கான வேலைகளும் களைகட்ட ஆரம்பித்துவிட்டன.. இதனால் தேர்தல் களம் சுறுசுறுப்பாகி உள்ளது.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, மற்றும் 9 என இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
.

வேட்பு மனு தாக்கல்
இதற்கான வேட்புமனு தாக்கலும் இன்று முதல் தொடங்கி நடந்து வருகிறது.. கூட்டணியுடன் போட்டியா? அல்லது தனித்து போட்டியா என்பது குறித்த விவகாரங்களிலும் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.. குறிப்பாக, திமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றன.. பாமக தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது.. அதேபோல, தேமுதிகவும் தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது.

பாஜக
பாஜகவோ, தாங்கள் கூட்டணியா? தனித்து போட்டியா என்பதை 2 நாட்களில் அறிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.. இப்படி அதிமுக கூட்டணியில் ஆளுக்கொரு பக்கம் முடிவுகளை அறிவித்து வருகின்றனர்.. அதேசமயம், திமுகவை எடுத்து கொண்டால், அந்த கூட்டணியில் இருந்து யாரும் விலகுவதற்கான சூழல் இல்லை.. மாறாக, புதிய கட்சிகள் வேண்டுமானால் கூட்டணி சேரலாம் என்று தெரிகிறது.

திமுக
ஏற்கனவே திமுக கூட்டணியில் மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய உள்ள நிலையில், மதிமுக தன்னுடைய தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் நடைபெற்ற அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நீட் தேர்வு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது: "தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சி, சகோதரர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி, அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் ஆட்சியாக உள்ளது ... அனிதா முதல் கனிமொழி வரை மொத்தம் 15 இளம் பிஞ்சுகளை நீட்தேர்வு காவு வாங்கியுள்ளது.

பொதுப்பட்டியல்
அவசர காலங்களில் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதே நீட் தற்கொலைக்கான முக்கிய காரணமாக உள்ளது. திமுக அரசு நீட் தேர்வை எதிர்த்து சட்ட போராட்டத்தை துவங்கி உள்ளது. நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் மாநிலம் இழந்த உரிமையை நிச்சயம் பெறுவோம்.. இதுவரை பணியாற்றி வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தை அடக்கி வழி நடத்த முயற்சி செய்தார்.

கூட்டணி
அதனை எதிர்த்து திமுகவுடன் சேர்ந்து நாங்களும் குரல் கொடுத்தோம்... இப்போது புதிதாக பதவி ஏற்க இருக்கும் ஆளுநர் முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்த தவறை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்.. இப்போது திமுக கூட்டணியில் தான் நாங்கள் உள்ளோம்.. வரும் உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும்" என்றார்.












Click it and Unblock the Notifications