வைகோ இறங்கி வர வேண்டும்.. அதுதான் மதிமுகவுக்கு நல்லது!
மதிமுக திமுகவுடன் அனுசரித்து போக வேண்டியது அவசியமாகிறது.
Recommended Video

சென்னை: வைகோ இனி என்ன செய்ய போகிறார்?
வைகோ ஒரு சிறந்த அரசியல்வாதி, நாடாளுமன்றவாதி, அரசியல்வாதிகளிடையே அறிவுப் பூர்வமாக பேசுகிற அறிவாளி. சிறந்த பேச்சாளர், சமூக அக்கறை நிறைந்தவர். மண்ணை பாதிக்கும் எந்த பிரச்சனை என்றாலும் அதற்கு முதல் ஆளாக வந்து நிற்கும் தலைவர்களில் முதன்மையானவர் வைகோதான்.
மீத்தேன் பிரச்சனை, கெயில் பிரச்சனை, சாய தொழிற்சாலை கழிவுகள், சீமைக் கருவேலமரம் என்று மக்களையும் மண்ணையும் பாதிக்கிற எந்த பிரச்சனையாக இருந்தாலும், அவற்றை எதிர்த்து மற்ற வேறெந்த தலைவர்களையும்விட உரத்து குரல் கொடுத்து போராடுபவர் வைகோதான் என்றால் அது மிகையல்ல. அதை மறுப்பதற்கும் இல்லை.

ஒரு சீட் எதற்கு?
அரசியல் என்று எடுத்துகொண்டால், சமீப காலங்களில் மதிமுகவின் வளர்ச்சி என்ன? மதிமுகவின் செயல்பாடுகள் என்ன? கட்சி விரிவுபடுத்தப்பட்டுள்ளதா? உறுப்பினர் சேர்க்கை அதிகமாகி இருக்கிறதா? என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் தேர்தல் என்று வரும்போது மதிமுகவுக்கு ஒரு சீட் என்றே ஒதுக்கப்படுவது ஏன்? கட்சியை பலப்படுத்தி இருந்தால், மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் இந்நேரம் தேடி வந்திருக்க மாட்டார்களா? எவ்வளவோ திறமை உள்ள வைகோவிடம், போதிய ஸ்தாபன அனுபவம் இல்லை என்றே நினைக்க தோன்றுகிறது.

கட்சி தலைமை
இப்படி திமுகவில் அங்கம் வகிக்கிறோமா, இல்லையா என்று தெரியாத அளவுக்கு இருப்பதே ஒரு கட்சிக்கு பலவீனம் இல்லையா? இப்படி ஒரு விவாதம் தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பதே மதிமுக மீதான நம்பகத்தன்மையை குறைத்து காட்டவில்லையா? ஒரு கட்சி தலைமை என்பது எப்போதுமே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

போயஸ் தோட்டம்
கடந்த கால வரலாற்றில் வைகோவின் 2 முக்கிய சம்பவங்கள் இன்னும் ஆறா தழும்புகளாக உள்ளன. திருச்சி, திமுக மாநாட்டிற்கு வருவார் என்று ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் காத்திருந்தபோது, நேராக போயஸ் தோட்டத்திற்கு போய் 35 சீட்டுக்களுக்கான உடன்பாட்டில் கையெழுத்து போட்ட போது முதல் நம்பிக்கை தகர்ந்தது.

தேமுதிக அஸ்தமனம்
இரண்டாவது காரணம், கடந்த கால மக்கள் நலக்கூட்டணி. நம்பியிருந்த திமுகவுக்கு கலிங்கப்பட்டி அல்வாவை கொடுத்துவிட்டு, விஜயகாந்தை கூட்டி வந்து கூட்டணிக்குள் வந்து, திமுகவின் வெற்றி வாய்ப்பை பறித்தபோது அடுத்த நம்பிக்கையும் தகர்ந்தது. இதோடு விஜயகாந்த்தின் அரசியல் வாழ்வும் அஸ்தமனமானதை மறுக்க முடியாது. இது சாணக்கியமாக இருந்தாலும், ஆபத்தும் இருக்கிறது.

தமிழிசை ட்வீட்
இப்படியெல்லாம் ஒரு பிம்பம் ஏற்கனவே இருக்கிறது. இந்நிலையில், திமுகவில் இருந்து கொண்டே எதற்காக தமிழக அமைச்சர்களை புகழ வேண்டும்? வைகோவின் இந்த திடீர் புகழ்ச்சியை பார்த்து தமிழிசை, "‘வைகோவின் புகழாரத்தைக் கண்டு மயங்கிவிடாதீர்கள். அமைச்சர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்" என்று ஏன் ட்வீட் போட்டார்? அதிமுக அமைச்சர்களை பாராட்டியது தமிழிசைக்கு பிடிக்கவில்லை என்றா? கிடையவே கிடையாது. வைகோ நடந்து வந்த கடந்த கால அரசியல் பாதைதான்.

பெரிய மைனஸ்
அரசியல் தந்திரங்களும் வியூகங்களும் வைகோவிடம் நிறையவே உள்ளன. ஆனாலும் அவை தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டே போகின்றன. வைகோ அதிக அளவு உணர்ச்சி வசப்படுவதுதான் ஒரு பெரிய மைனசாக உள்ளது. இதுவே கட்சியையும் பாதித்துவிடுகிறது. எனவே இந்த முறை எப்படியாவது மதிமுக தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சமூக அரசியல்
இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. ஒரு அரசியல் கட்சிக்கு தொடர்ந்து சட்டமன்றம், நாடாளுமன்றம் இவற்றில் ஏதாவது ஒன்றில் தங்களுக்கான உறுப்பினர் யாராவது ஓரிருவர் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கட்சிக்கும் கட்சித் தலைவருக்கும் பொதுமக்களிடையே முக்கியத்துவம் இருக்கும். இல்லையென்றால் இந்தியா போன்ற சமூக அரசியல் அமைப்புகொண்ட நாட்டில் ஒரு கட்சி தனது தொண்டர்களைக்கூட நீண்டகாலம் தக்க வைத்துக் கொள்ள முடியாது.

தவறிவிட்டார்
இதை ஏற்கனவே வெற்றி முகத்துடன், இருக்கும்போதே, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் உறுப்பினராக தொடருவதற்கான தேர்தல் பணிகளைச் செய்ய தவறிவிட்டார். களப்பணியில் ஈடுபட்டு கட்சியை பலப்படுத்தவும் தவறிவிட்டார். இப்படி ஒரு கட்சியை வைத்து கொண்டு, இவ்வளவு சீட்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பதும், அதற்காக கூட்டணியினரை வெறுப்பேற்ற வேண்டும் என்று எதிர்தரப்பினை பாராட்டுவதும், பிறகு பின்வாங்குவதும் மதிமுகவுக்கு வருங்காலத்தில் மேலும் பின்னடைவைதான் உண்டாக்கும்.












Click it and Unblock the Notifications