வீடு மட்டுமில்லை! விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்தாலும் சாப்பிட்டுதான் போகணும்! கமகமக்கும் பிரியாணி!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவிடத்தையொட்டி கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் சுடச்சுட பிரியாணி தயார் செய்யப்பட்டு வருகிறது. அவை ஒரு டப்பாவில் போட்டு தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்படுகிறது.
விஜயகாந்த் என்றாலே விருந்தோம்பல் நாயகன் என அழைக்கப்படுவதுண்டு. தன் வீடு என்றில்லை, தனது தயாரிப்பு நிறுவனம்,கட்சி ஆபிஸ் என எதுவாக இருந்தாலும் சாப்பிட்டீர்களா என கேட்பாராம். 1990 காலகட்டங்களில் சினிமா வாய்ப்பு தேடி ஒவ்வொரு நிறுவனங்களாக ஏறி இறங்கும் பலர் சாப்பிடுவதற்குக் கூட காசு வைத்திருக்க மாட்டார்கள்.

அவர்கள் எல்லாம் விஜயகாந்த் ஆபிஸுக்கு போனால் நிச்சயம் உணவு கிடைக்கும் என்று அங்கு போய் சாப்பிடுவார்களாம். இதை இன்றளவும் பலர் நினைவுகூர்கிறார்கள். இந்த நிலையில் இன்று விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன் விஜயபிரபாகரன், துணை பொதுச் செயலாளர் சுதீஷ், மூத்த நிர்வாகி பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
விஜயகாந்தின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு பலர் வருகை தந்துள்ளதாக அதற்கான வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விஜயகாந்தின் நினைவு தினம் குருபூஜையாக அனுசரிக்கப்படுவதால் இன்று பல தொண்டர்கள் மாலை அணிந்து கொண்டு வந்துள்ளனர்.
துளசி மாலையில் தேமுதிகவின் கட்சி நிறத்தையும் விஜயகாந்த் டாலரையும் போட்டிருக்கிறார்கள். விஜயகாந்த் காலண்டருடன் வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னை மாநில தேர்தல் தலைமை அலுவலகத்திலிருந்து விஜயகாந்த் கட்சி ஆபிஸ் வரை அமைதி பேரணிக்கு அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால் காவல் துறை போக்குவரத்து பாதிப்பை காரணம் காட்டி அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தடையை மீறி அமைதி பேரணி ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் பிரேமலதா, விஜயபிரபாகரன், சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கோயம்பேட்டில் அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்காக சுடச்சுட மீல் மேக்கர் பிரியாணி தயாரிக்கப்பட்டு டப்பாக்களில் அடைக்கப்பட்டு வருகிறது. இதை பிரேமலதா வழங்கவுள்ளார். ஏற்கெனவே கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் அன்னதான டிரஸ்ட் என்ற பெயரில் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதில் விஜயகாந்துக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. திரைத்துறையில் கதாநாயகன் தொடங்கி கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் ஒரே சாப்பாடு முறையை கொண்டு வந்தவர் விஜயகாந்த். எதை கொடுத்தாலும் போதும் என சொல்லாத மனநிலைக்கு வரும் மனிதன், போதும் என சொல்வது உணவுக்கு மட்டும்தான் என்பதே விஜயகாந்தின் எண்ணமாக இருந்தது.












Click it and Unblock the Notifications