பதற வைக்கும் பானிபூரி.. கையேந்தி பவன்களுக்கு கடிவாளம்! அரசு போட்ட முக்கிய உத்தரவு! இனி ரொம்ப கவனம்!
சென்னை: புற்றுநோய் பாதிப்பு அச்சம், சுகாதாரமற்ற தயாரிப்பு முறை உள்ளிட்ட புகார்கள் காரணமாக பானிபூரி மற்றும் சாலையோர உணவகங்கள் கட்டாயம் பதிவு உரிமம் மற்றும் மருத்துவ சான்றிதழ் பெற வேண்டுமென தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பானி பூரி பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், கர்நாடக மாநிலத்தில் பானி பூரி கடைகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கும் தகவல் வெளியானது.

கர்நாடகா முழுவதிலும் இருக்கும் சுமார் 250க்கும் மேற்பட்ட கடைகளில் கர்நாடக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 250 மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அவற்றில் 18 மாதிரிகள் மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியற்றவை எனவும், 41 மாதிரிகளில் புற்றுநோய் ஆபத்தை விளைவிக்க கூடிய ரசாயனங்களும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பானி பூரி தொடர்ந்து அனைவராலும் மிகவும் விரும்பி வாங்கி சுவைக்கப்படும் ஷவர்மாவிலும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதாகவும், கர்நாடக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்ந்து கர்நாடகா முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரம் தேசிய செய்தியானது. ஏற்கனவே உணவுப்பொருட்கள் விஷமாகி வரும் நிலையில் பானி பூரியும் இப்படியா என உணவு பிரியர்கள் நொந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்திலும் பானிபூரி கடைகளில் சோதனை நடத்த உத்தரவிட்டிருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த காலங்களில் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஷவர்மா மூலம் மரணங்கள் ஏற்பட்டபோது தமிழகத்திலும் சோதனைத் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் பானிபூரி விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருக்கும் பானி பூரி கடைகள் உணவகங்களில் சோதனை நடத்தி மாதிரிகளை சேகரித்தனர். அப்போது சுகாதாரமற்ற கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பு அச்சம், சுகாதாரமற்ற தயாரிப்பு முறை உள்ளிட்ட புகார்கள் காரணமாக பானிபூரி மற்றும் சாலையோர உணவகங்கள் கட்டாயம் பதிவு உரிமம் மற்றும் மருத்துவ சான்றிதழ் பெற வேண்டுமென தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் உள்ள சாலையோர உணவ உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் நடைபெற்றது.
உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட சாலையோர உணவு விற்பனை செய்யும் வியாபாரிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு தோல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளதா என மருத்துவ கல்லூரி குழுவினர், பரிசோதித்து பதிவு உரிமம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமார், சென்னை முழுவதும் உணவு பாதுகாப்பு துறை சார்பாக மண்டல வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கூறினார்.
குறிப்பாக பானி பூரி விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் சாலையோர உணவக வியாபாரிகளுக்கு சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் மற்றும் பயிற்சி பதிவு உரிமம் பெறுதல், மருத்துவ பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்படும் எனவும், இதற்கான சிறப்பு முகாம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார். மேலும் பதிவு உருவம் மற்றும் மருத்துவ சான்றிதழ் பெறாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications