ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன
சென்னை: மத்திய அரசாங்கம் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வரும் நிலையில், இப்போது ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மூன்று மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் ஒரே தவணையில் வழங்கப்பட உள்ளன. அதை பற்றின விவரத்தை இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி, மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான கோதுமை மற்றும் அரிசி போன்றவற்றில் பயனாளிகள் ஏப்ரல் மாதத்திலேயே ஒட்டுமொத்தமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதாவது சுமார் 80 கோடி பயனாளிகளுக்குப் பெரும் நிவாரணமாக அமையவுள்ள இந்த திட்டத்தின் மூலம், தங்களுக்கு அருகிலுள்ள நியாய விலைக் கடைகளில் குறிப்பிட்ட நேரத்தில் சென்று பொதுமக்கள் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் - மத்திய அரசின் மெகா ஆஃபர்
இப்படியொரு திடீர் மாற்றத்திற்குப் பின்னால் சில முக்கிய காரணங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கோடைக்காலத்தில் நிலவக்கூடிய கடும் வெப்ப அலைகளின் போது பொதுமக்கள் ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதைத் தவிர்க்கவும், உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த சில வாரங்களில் மத்திய அரசு விவசாயிகளிடமிருந்து புதிய கோதுமையைக் கொள்முதல் செய்ய உள்ளது. இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் புதிய தானியங்களை சேமித்து வைக்க இடவசதி தேவைப்படுவதால், பழைய இருப்பை மாநில அரசுகளுக்கு முன்கூட்டியே வழங்கி காலி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தெலங்கானா போன்ற மாநிலங்களில் இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அங்கு ஒரு நபருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 6 கிலோ அரிசி என்ற கணக்கின்படி, மூன்று மாதங்களுக்குச் சேர்த்து மொத்தம் 18 கிலோ அரிசி ஒரே நேரத்தில் வழங்கப்பட உள்ளது.
சேமிப்பு கிடங்கு வசதிகள்
இதேபோன்ற நடைமுறையை கடந்த 2025ம் ஆண்டு, தமிழக அரசு பருவமழை காலத்தை முன்னிட்டு செயல்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம்.. போக்குவரத்துச் சிக்கல்களை தவிர்க்க ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதப் பொருட்களை மே மாதத்திலேயே வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அப்போது உத்தரவிடப்பட்டது.
அதுபோலத்தான் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம், இவ்வளவு பெரிய அளவிலான உணவு தானியங்களை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்வதில் உள்ள போக்குவரத்துச் சிரமங்கள் மற்றும் உள்ளூர் கடைகளில் உள்ள சேமிப்புக் கிடங்கு வசதிகள் குறித்து சில விமர்சனங்களும் எழுந்துள்ளன.
பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைக்கும் நோக்கில், கடந்த சில ஆண்டுகளில் தகுதியற்ற மற்றும் போலி ரேஷன் அட்டைகளை நீக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பயனாளிகள்
2025ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 41.41 லட்சம் போலி அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக ஹரியானாவில் 13.43 லட்சம் அட்டைகளும், ராஜஸ்தானில் 6.05 லட்சம் அட்டைகளும் நீக்கப்பட்டுள்ளன.
இதற்கு முந்தைய 2024 மற்றும் 2023 ஆண்டுகளில் முறையே 48.48 லட்சம் மற்றும் 41.99 லட்சம் அட்டைகள் ரத்து செய்யப்பட்டன. தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் தரவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாகவே இது சாத்தியமானதாக மத்திய இணை அமைச்சர் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா தெரிவித்துள்ளார். இப்போது நாட்டின் 99.2 சதவீத பயனாளிகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்பதும், 98.75 சதவீத விநியோகம் பயோமெட்ரிக் முறையில் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications