2026இல் மெகா ப்ளான் ரெடி? எடப்பாடிக்கு செக்? அண்ணாமலை இடத்தில் கேசவ விநாயகம்?
சென்னை: 2026 இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் பல வியூகங்களை அண்ணாமலை அமைத்துள்ளார் என்றும் எடப்பாடி பழனிசாமியை அவர் 2ஆவது இடத்திற்கு தள்ளிவிடுவார் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.
மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படலாம் என சில மாதங்களாகவே ஊகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பதவி மாற்றம் அண்ணாமலை லண்டன் பயணத்தையொட்டி நடக்கலாம் என சொல்லப்பட்டது. அடுத்த தலைவர் யார்? என்ற ஆலோசனை நடந்துவருவதாகப் பேச்சு அடிப்பட்டது.

அந்தப் பட்டியலில் தமிழிசை இருப்பதாக தகவல் கசிந்தது. கூடவே தனக்கு அந்தப் பதவியை வழங்க வலியுறுத்தி நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் மேற்கொண்டதாகவும் தகவல் வந்தது. இன்னொரு தரப்பு வானதி சீனிவாசனை முன்வைத்து ஒரு விவாதத்தை நடத்தி வருகிறது.
சர்வதேச அரசியல் பற்றிப் படிப்பதற்காக இந்திய அரசியல் தலைவர்கள் சிலருக்கு லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் செல்ல இருக்கிறார் எனச் செய்திகள் வெளியாகி இருந்தன. அங்கே அவர் 12 வாரங்கள் வரை தங்கி இருப்பார் எனச் சொல்லப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஒரு முடிவு இதுவரை தெளிவாக எட்டப்படவில்லை. அண்ணாமலைக்கு மாற்றாக வேறு யாரும் நியமிக்கப்படுவார்களா என்பதும் இதுவரை உறுதியாகவில்லை. இதனிடையே அண்ணாமலை அமித்ஷாவைச் சந்தித்துத் திரும்பியதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் தெலங்கானா, ஒடிசா பாணியில் தமிழ்நாட்டில் பாஜகவை எப்படி 2026 தேர்தலில் 2வது இடத்திற்குக் கொண்டுவருவது என அமித்ஷா ஒரு திட்டம் போட்டு அண்ணாமலையிடம் கொடுத்துள்ளதாக ஒரு விசயம் வெளியாகியுள்ளது. கூடவே அடுத்து இடைக்கால மாநிலத் தலைவராக கேசவ விநாயகத்தை அண்ணாமலை தேர்வு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இது பற்றி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி சில விசயங்களைப் பேசி இருக்கிறார். அவர், "நாடு முழுவதும் என்.டி.ஏ Vs இந்தியா கூட்டணி என்ற நிலையில் தான் அரசியல் களம் உள்ளது. காங்கிரஸ் தனது பலத்தை அதிகரிக்க ஹேமந்த் சோரன் இறங்கிப் போய் பேசுகிறது. சிவசேனாவிடம் போய் பேசுகிறது. தமிழ்நாட்டிலும் இதே அரசியல் சூழ்நிலைதான் உள்ளது. ஸ்டாலின் தேர்தல் களத்தில் கூட்டணி பலத்தால்தான் வெற்றி பெற்றோம் என்றே சொல்கிறார். கருணாநிதியைவிட ஸ்டாலின் அரசியல் செய்வதில் வல்லவராக இருந்து வருகிறார்.
இங்கே அதிமுக இரண்டாவது இடத்தில் இல்லை. என்.டி.ஏ கூட்டணிதான் உள்ளது. அண்ணாமலை மிகத் தெளிவாக அரசியல் செய்கிறார். சின்ன கவுண்டர் ஆட்டத்தைப் போகப் போகப் பாருங்கள். பெரிய கவுண்டர் என்ன ஆகப்போகிறார் என்பதையும் பாருங்கள். சீமான் வளர்ந்து வரவேண்டும் என்றும் விஜய் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் 2026 தேர்தல் களத்தில் 4 முனை போட்டியே நிலவும் என்றும் அண்ணாமலை சொல்கிறார்.
வரும் 16 ஆம் தேதி செயற்குழுவை பழனிசாமி கூட்டி உள்ளார். எப்படி இந்தப் போட்டியை எடப்பாடி எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதைப் பார்க்கத்தான் போகிறோம். பாஜக தமிழ்நாட்டில் ஒடிசா, தெலுங்கானா, ஹரியானா, அசாம் போல ஏறிப் போக இருக்கிறது. பீகார், மகாராஷ்டிரா போலத் தேங்கிவிடக் கூடாது என்பதிலும் அவர் குறியாக இருக்கிறார்.
திமுக Vs அதிமுக என்பது வன்னியர்கள் உள்ள பகுதிகளில் மட்டும்தான் உள்ளது. 10.5% உள் ஒதுக்கீடு எடப்பாடி பழனிசாமி கொடுத்ததால் பாமகவை மீறி வன்னியர்கள் வாக்கு எடப்பாடிக்குப் போய் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சிதம்பரம் இந்தத் தொகுதிகளில் திமுகவை விட அதிமுக முதல் இடத்தில் உள்ளது. ஆனால், அதே அதிமுக வாக்கு வங்கி நாடார் அதிகம் உள்ள பகுதிகளில் படுமோசமாக இருக்கிறது. அதை உணர்ந்துதான் 2 ஜாதிகளின் கட்சியாக அதிமுக சுருங்கி விட்டது என அண்ணாமலை கூறினார்.

இதை எல்லாம் உணர்ந்துதான் அண்ணாமலைக்கு அசைன்மெண்ட் கொடுத்துள்ளார் அமித்ஷா. அண்ணாமலை யாரை சொல்கிறாரோ அவரைத்தான் இடைக்கால தலைவராக அமித்ஷா நியமிப்பார். 2009இல் எப்படி தமிழ்நாட்டில் வாஜ்பாய் தலைமையிலிருந்த பாஜக வலுவாக இருந்ததோ அதே நிலைக்கு மீண்டும் 2026இல் திரும்பவேண்டும் என்று முடிவு செய்து அமித்ஷா வியூகம் அமைத்துள்ளார்.
ஆகவே, அண்ணாமலைக்குப் பதிலாகக் கேசவ விநாயகம் நியமிக்கப்படுவார் எனச் சிலர் வியூகங்கள் சொல்கிறார்கள். அவர் கட்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர். தேசிய அரசியலில் அனுபவம் மிக்கவர். அவர் தலைவராக வருவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், அண்ணாமலை தனது லண்டன் பயணத்தைத் தள்ளிப் போட்டுவிட்டு கட்சியைக் காப்பாற்ற வேலைகளைச் செய்யவேண்டும். அவரது லண்டன் பயணம் இப்போதைக்குத் தேவையற்றது. இது என் கோரிக்கை. அவர் விருப்பம் என்னவோ அது தெரியாது.
2026 இல் தேர்தல் நேரத்தில் இன்னும் சில அதிரடி திருப்பங்களை எல்லாம் பாஜக செய்ய உள்ளது. அதை இப்போதே சொல்ல முடியாது. சீமான் சமூக நீதி அணி அமைப்பேன் என்றும் 16 தொகுதிகளில் பட்டியலின மக்கள் வண்ணார்,குயவர் சமூகத்தினரை வேட்பாளராக நிறுத்துவேன் என்றும் சொல்லி இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக ஓட்டு வங்கி கட்டுக்கோப்பாக இல்லை என்பதை சீமான் உணர்ந்துவிட்டார். அதற்கு விக்கிரவாண்டி தேர்தல் துணை செய்துள்ளது. இந்த இடைத்தேர்தல் மட்டும் நடக்காமலிருந்தால் 2026 கண்மூடித் தனமாக எடப்பாடியைச் சீமான் நம்பிக் கொண்டிருந்திருப்பார். அதைத் தெளிவாக உணர்த்திவிட்டது விக்கிரவாண்டி.
ஆகவே 2026இல் அதிமுக கூட்டணிக்கு எந்தக் கட்சியும் போகாது. அவர் 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடலாம். கிருஷ்ணசாமி, தேமுதிகவைக் கூட பாஜக தன் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறது. ஆகவே பல அதிரடி திருப்பங்கள் காத்துள்ளன" என்கிறார்.












Click it and Unblock the Notifications