கர்ப்பிணிகளுக்கு மனநலன், உடல் நலன் முக்கியம்.. சமுதாய வளைகாப்பு விழாவில் பேசிய கிருத்திகா உதயநிதி
சென்னை: கர்ப்பிணிகள் உடல் நலம் மற்றும் மனநலனை பாதுகாக்க வேண்டும் என சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிருத்திகா உதயநிதி வலியுறுத்தினார். சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சீர்வரிசை பொருட்களை கொடுத்து ஆசி வழங்கினார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிருத்திகா உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேடையில் பேசிய கிருத்திகா, நானும் இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளேன். அதனால் கர்ப்ப காலத்தில் என்னென்ன நடக்கும் என்று எனக்கும் தெரியும்.

கர்ப்பிணிகள் நிறைய விசயங்களை சந்திப்பார்கள். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளின் மனநலன் காப்பது முக்கியம் அதே போல உடல் ஆரோக்கியமாக இருப்பதும் முக்கியம். கர்ப்பிணிகள் சத்தாக சாப்பிடுவது ரொம்ப முக்கியம். அப்போதுதான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
நிறைய பேருக்கு இது தெரிந்திருக்காது. குழந்தையின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துகள். இந்த சமுதாய வளைகாப்பு விழா நடத்தியதற்கு வாழ்த்துக்கள் என்றுகூறினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100 கர்ப்பிணி பெண்களுக்கும் மாலை மற்றும் வளையல் அணிவித்து, பழங்கள், சத்துமாவு, புடவை அடங்கிய சீர்வரிசை தட்டையும் வழங்கி அட்சதை தூவி ஆசி வழங்கினார். விழாவில் பங்கேற்ற அனைவருடனும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.












Click it and Unblock the Notifications