ஆட்டம் காட்டும் வெயில்! ஆறுதலாக வந்திருக்கும் வானிலை அப்டேட்.. ஆஹா 15 மாவட்டங்களுக்கு 'கூல்' நியூஸ்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்துக்கொண்டு இருக்கும் நிலையில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் ஏற்படும் வானிலை மாற்றத்தையும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
கத்திரி வெயில் இன்னும் தொடங்கவில்லை. ஆனாலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியிருக்கிறது. மறுபுறம் அனல் காற்று வெப்பத்தின் இந்த பாதிப்புகளை அதிகரித்துள்ளது. இதனால் உச்சி வெயில் நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல நீர்ச்சத்து நிரம்பிய பழங்களை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீர் மோர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. பெரும்பாலான மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. ஏற்கெனவே புழுக்கத்திலும், வெக்கையிலும் வாடி வந்த மக்களுக்கு இந்த மழை பெரும் ஆசுவாசத்தை கொடுத்தது. தலைநகர் சென்னையிலும் திடீரென பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. என்னதான் மழை பெய்தாலும் இன்று காலை முதலே மீண்டும் வழக்கம்போல வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.
காலை 8 மணி நிலவரப்படி சென்னையின் முக்கிய பகுதிகளான ஆவடி, பூந்தமல்லி, கோயம்பேடு, திருவொற்றியூர், தாம்பரம், ஆலந்தூர் என வட, தென் மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சுமார் 86 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இது நண்பல் நேரத்தில் சுமார் 98 டிகிரி பாரன்ஹீட் வரை செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் மற்றொரு மகிழ்ச்சியான செய்தியை வைத்திருக்கிறது. அதாவது இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதுதான் அந்த செய்தி. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது..

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூரி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மேலும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழ்நாட்டில் லேசானது மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலையை பொறுத்த அளவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னையை பொறுத்த அளவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். வெப்பநிலை அதிகபட்சமாக 96-98 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். குறைந்தபட்சமாக 80 டிகிரி பாரன்ஹீட் இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை" என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications