வீட்டு வாசலில் வண்டி நிறுத்துறீங்களா? வீடுகள் முன்பு "நோ பார்க்கிங் போர்டு"க்கு தடை? ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சென்னையில் பல வீடுகளின் முன்பு அனுமதியின்றி வைத்துள்ள நோ பார்க்கிங் போர்டுகள், பூந்தொட்டிகளையும் அகற்ற கோரிய வழக்கில், உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது.. என்ன நடந்தது?
சமீபத்தில், தனியார் நிறுவன அதிகாரி கிஷார் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "சென்னை அண்ணாநகர், N பிளாக்கில், 25வது தெருவில் நான் வசித்து வருகிறேன்.. எங்கள் குடியிருப்பு பகுதியில், தெருவோர உணவு கடைகளை, உரிமம் பெறாமல் நடத்துகிறார்கள்..

உரிமம் இல்லை: தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் வாகனங்களை அருகில் உள்ள தெருக்களில் நிறுத்துகின்றனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சட்ட விரோத செயல்களும் தற்போது நடக்கின்றன. இதனால், பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.
எனவே, உரிமம் பெறாமல் இயங்கும் கடைகளையும், அனுமதியின்றி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும்" என்ற மனுவில் கூறப்பட்டிருந்தது.
நோ பார்க்கிங்: இந்த மனுவானது, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, முதல் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது... அப்போது போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, ''மனுதாரரின் புகாரை விசாரித்து வாகனங்கள் அகற்றப்பட்டு, அந்தப் பகுதியில், நோ பார்க்கிங் போர்டு வைக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
இதையடுத்து, "குடியிருப்பு பகுதிகளில் வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி வாசலில், வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பதற்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று தமிழக போக்குவரத்து போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
தமிழக போக்குவரத்து துறை: இதனிடையே, சென்னையில் மோட்டார் வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் "நோ பார்க்கிங்" பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் அமைக்கக் கூடாது என தனியார் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதேபோலவே, சென்னையில் பல வீடுகளின் முன்பு அனுமதியின்றி வைத்துள்ள நோ பார்க்கிங் போர்டுகள், பூந்தொட்டிகளையும் அகற்ற கோரி நந்தகுமார் என்பவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நேற்று விசாரணைக்கு வந்தது.
அதிரடி உத்தரவு: அப்போது, சென்னையில் வீடுகளின் முன் அனுமதியின்றி "நோ பார்க்கிங்" போர்டுகள், தடுப்புகளை வைத்திருப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விதிமுறைகளை பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதளம் வழியே வெளியிடவும் காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற உத்தரவு பெரும் கவனத்தை பெற்று வருகிறது.. தமிழகத்திலுள்ள பல வீடுகளின் கதவுகளில் "நோ பார்க்கிங்" என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தாலும், சில விளம்பரதாரர்கள் வீடுகளின் உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெறாமல் நோ பார்க்கிங் என்ற அறிவிப்பு பலகையை வைத்துவிட்டு அதில் தங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தையும் வைத்து விடுகிறார்களாம்.
வீட்டின் ஓனர்களே தங்கள் வீட்டிற்கு பார்க்கிங் என்பது தொல்லையாக இருந்தால் அவர்கள் போர்டு வைப்பது என்பது வேறு, ஆனால் ஏதோ ஒரு நிறுவனத்தினர் வீட்டில் உரிமையாளரிடம் எந்தவித அனுமதியும் இல்லாமல் நோ பார்க்கிங் விளம்பரத்தை ஒட்டி அதன் நிறுவனத்தையும் விளம்பரப்படுத்தி கொள்வது என்பது வேறு. அதனால்தான், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை இன்று சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications