நடுவானில் நடக்கும் "மோதல்".. துடிக்கும் காற்றழுத்தம்.. தமிழ்நாட்டிற்கு வானிலை வல்லுனர்கள் வார்னிங்
சென்னை; வடகிழக்கு பருவமழைக்கு இடையே வங்கக்கடல் வான் பகுதியில் முக்கியமான வானிலை மோதல் ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டு வானிலையை இது பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரம் மிக தீவிர கனமழை பெய்தது.
அதன்பின் மூன்றாவது வாரம் கனமழை குறைந்து, குளிரான வானிலை நிலவியது. முதல் வார மழையானது வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏற்பட்ட மழை ஆகும்.

மழை
இரண்டாவது வாரம் ஏற்பட்ட மழையானது, வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஏற்பட்ட மழையாகும். இரண்டாவது வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறியது. ஆனால் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறிய 24 மணி நேரத்தில் இது கரையை கடந்தது. இதனால் அப்போது புயலாக இது உருவெடுக்கவில்லை. ஆனால் சென்னைக்கு நல்ல மழையை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கொடுத்தது.

டெல்டா கனமழை
அதேபோல் டெல்டா மாவட்டங்களுக்கும் மிக தீவிர கனமழையை இது கொடுத்தது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிற்கு அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கான ஆபத்து தொடங்கி உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதியதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்றும் அதே பகுதிகளில் நிலவி வருகிறது. இது மிக மெதுவாக நகர்ந்து வருகிறது.

என்ன நடக்கும்?
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது இனி வலுப்பெறும். ஆனால் இது புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை எதிர்க்க வறண்ட காற்று உருவாகி உள்ளது. சென்னை - ஆந்திரா பகுதிகளில் வறண்ட காற்று உள்ளது. இந்த காற்றுக்கும் - காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது.

மோதல்
இந்த மோதல் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி செல்லும் திசை, அதன் வேகம், வலிமை ஆகியவை பாதிக்கப்படலாம். இதன் காரணமாக பெய்ய கூடிய மழையின் அளவும் பாதிக்கப்படலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாகவே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. வறண்ட காற்று காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஏற்படும் மழை அளவும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து நடக்கும் மோதல்
இதையடுத்து தமிழ்நாடு அரசு இன்று வழங்கி இருந்த மிக கனமழைக்கான எச்சரிக்கையை வாபஸ் வாங்கியது. ஆனால் நாளையில் இருந்து தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு செய்துள்ள ட்விட்டில், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிர்ப்புகளை மீறி வறண்ட காற்றுடன் மோதிக்கொண்டு இருக்கிறது. காற்று குவிதல் மற்றும் விலகுதல் தொடர்பான சார்ட்டுகளை வைத்து பார்க்கும் போது, இந்த தாழ்வு பகுதி மேலும் தீவிரம் அடைவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. இந்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் தமிழக கடல் பகுதியை நோக்கி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக இன்றில் ( ஞாயிற்றுக்கிழமை) இருந்து மழை தீவிரம் அடைய வாய்ப்புகள் உள்ளன.

மழை நிலவரம்
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. நாளை விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாள் திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதற்கு மறுநாள், , தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications