“நம்ம குடும்பம்”.. தமிழ்நாட்டு பெண்ணுக்கு சீர் செய்த வடமாநில தொழிலாளர்கள்.. நெகிழ வைக்கும் சம்பவம்!
சென்னை : தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி பல குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், உரிமையாளரின் வீட்டு சுப நிகழ்ச்சியில் வட மாநில தொழிலாளர்கள் சீர் வரிசையுடன் பங்கேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுமான நிறுவன உரிமையாளர் தனது வீட்டு சுப நிகழ்ச்சிக்கு, தன்னிடம் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்திருந்தார்.
இதையடுத்து, வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சீர் வரிசை மற்றும் பரிசுப் பொருட்களுடன் வந்து, ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

கட்டுமான நிறுவன முதலாளி
சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜாமணி - பத்மாவதி தம்பதியர். கட்டுமான நிறுவன உரிமையாளரான ராஜாமணியிடம் வட மாநிலத் தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். தன்னிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் அனைவரையும் மரியாதையுடன் நடத்தி, அன்போடும், அக்கறையோடும் பராமரித்து வந்துள்ளார் ராஜாமணி.

சுப நிகழ்ச்சி
இந்நிலையில், ராஜாமணியின் மகளின் பூப்புனித நீராட்டு விழா, பூந்தமல்லி அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ராஜாமணி, தன்னிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் பத்திரிக்கை வைத்து, அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள், சீர்வரிசை தட்டுகளுடன் விழாவில் கலந்துகொண்டனர்.

சீர்வரிசையுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள்
வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களாக இருந்தாலும், தங்கள் முதலாளி தனது வீட்டு சுப நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்ததால், தமிழர் கலாச்சாரப்படி, சீர்வரிசையுடன் வந்து அசத்தியுள்ளனர். வட மாநில தொழிலாளர்கள் அச்சுறுத்தலில் இருப்பதாக வதந்திகள் பரவிய சூழலில், தங்கள் முதலாளியின் இல்ல விழாவிற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு, சீர்வரிசை பொருட்களோடு வந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நல்லுறவுக்கு உதாரணம்
வட மாநிலத் தொழிலாளர்களும், உறவினர்கள் போலவே நிகழ்ச்சியில் பங்கேற்று, பெண்ணுக்கு அட்சதை தூவி வாழ்த்தினர். வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவல் பரவி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், இந்த நிகழ்வு தமிழ்நாட்டினர் - வட மாநில தொழிலாளர்கள் இடையேயான நல்லுறவுக்கு உதாரணமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications