பால் விலை உயர்த்தப்படும்... முதலமைச்சர் பழனிசாமி சூசக தகவல்
சென்னை: பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்தி தர அரசு தயாராக உள்ளது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரில் இன்று பால்வள துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் கே.பி.பி. சாமி கூறினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தினால், பால் விலையையும் உயர்த்த நேரிடும்; இதற்கு திமுக சம்மதித்தால் எங்களுக்கும் சம்மதம் என்றார். பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தினால். பால் நுகர்வோர்களுக்கான விலையையும் உயர்த்தினால் தான் சரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதே சமயம், சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலக கட்டடம் ரூ.8.88 கோடியில் நவீனமயமாக்கப்படும். 5 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், ரூ.5.82 கோடியில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் புதிதாக துவங்கப்படும்.
142 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 12 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 36,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 149 கிடங்குகள் நடப்பாண்டில் ரூ.39.37 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், வேலூர் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிப்பது தொடர்பாக அலுவல் ஆய்வு கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications