கென்னித்ராஜ் அன்புவை நியாபகம் இருக்கா?.. அன்பில் மகேஷ் செய்த தரமான சம்பவம்
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் சமீபத்தில் நடந்த பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சியில் ரோபோடிக்ஸ் விஞ்ஞானி கென்னித்ராஜ் அன்பு பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கென்னித்ராஜ் அன்புவை அழைத்துப் பேசியுள்ளது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வறுமை நிலையில் இருந்து வாழ்க்கையில் வென்று சாதனை படைத்தவர்களைப் பார்த்திருப்போம். அந்த வகையில், பள்ளிக்குச் சென்றால் சத்துணவு சாப்பாடு கிடைக்கும் என்பதற்காகவே அரசுப் பள்ளிக்குச் சென்ற கென்னித் இன்று உலகம் போற்றும் வகையில் ரோபோடிக்ஸ் விஞ்ஞானியாக வளர்ந்து நிற்கிறார். 1995 இல் தனது சொந்த ஊரில் இருந்து குடும்பத்துடன் சென்னைக்கு வந்த கென்னித் ராஜின் அப்பாவுக்கு 4 வது நாளில் கிடைத்தது மலம் அள்ளும் வேலை. இவரது அப்பா மலம் அள்ளும் தொழிலாளி என்பதே பல நாட்கள் அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது.

ஏழ்மைச் சூழ்நிலையிலும் அப்பாவின் உதவியுடன் இன்ஜினியரிங் படித்து முடித்த கென்னித்துக்கு அமெரிக்க கம்பெனியில் வேலை கிடைத்தது. 2014இல் இந்திய அளவில் ரோபோடிக் துறையில் 2வது இடம் பெற்றார். ரஷ்யாவுக்குச் சென்று உலக அளவில் 6 ஆவது இடத்தைப் பிடித்தார். தற்போது, ரோபோடிக் ஸ்பெஷலிஸ்ட் கம்பெனியில் சி.இ.ஓ. ஆக இருக்கிறார்.
தமிழ்நாடு அரசு சார்பில் அண்மையில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கென்னித் ராஜ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலருக்கு உந்து சக்தியாக விளங்கும் கென்னித் ராஜை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் அன்பில் மகேஷ் தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தந்தை பெரியாரின் கொள்கைகளைச் சட்டங்களாக்கிய பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கல்வித் திட்டங்களால் அறிவுலகின் உயரத்தை அடைந்தார்கள் தமிழ் மாணவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான் அன்புச் சகோதரர் கென்னித்ராஜ் அன்பு.
வறுமையில் வாடிய தூய்மை பணியாளரின் மகன் எனும் இடத்திலிருந்து உலகம் வியக்கும் ரோபோடிக்ஸ் விஞ்ஞானி எனும் உச்சத்தைத் தொட்டவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏழை எளிய மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்' என்ற திராவிடத் தலைவர்களின் வழியில் தனது கண்டுபிடிப்புகளின் உரிமைகளை மக்களுக்கு அர்பணித்து வருகின்றார்.
தன் வாழ்வையும், திராவிடக் கொள்கைகளையும் மாணவர்களுக்குப் பரிமாறி வரும் கென்னித்ராஜ் அன்பு அவர்களை அழைத்து 'பெரியார் இன்றும் என்றும்' புத்தகத்தை வழங்கி வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டோம். திராவிடத்தால் உயிர் பெற்றோம். திராவிடத்தால் வாழ்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, கென்னித் ராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கல்வி எப்போதும் நம்மை கை விடுவதில்லை. தமிழ்நாடு அரசின் பெரியார் பிறந்த நாள் நிகழ்வில் நமது உரையின் காணொளியை கண்ட பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை நேரில் அழைத்து பாராட்டினர். வழக்கமான பாராட்டாக இல்லாமல், "வாங்க கெனித் , ரொம்ப மகிழ்ச்சி உங்களை பார்ப்பதில், கல்வி எவ்வளவு உயர்வை தரும், நமது அரசின் திட்டங்கள் எவ்வளவு மாற்றங்களை சமூகத்தில் உருவாக்கும் என்பதற்கு சாட்சியாக உள்ளீர்கள்" என அன்புடன் அணைத்துக் கொண்டார்.
தந்தை பெரியார் இன்றும், என்றும் புத்தகம் அளித்தார். எவ்வளவோ பணிகளுக்கு மத்தியிலும் கல்வியால் ஒருவர் முன்னேறினால் அவரை அழைத்து பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மிகச் சிறந்த மனிதர் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு மிகுந்த நன்றியும் , மகிழ்ச்சியும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications