சென்னையிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகள் இனி அங்கிருந்து! அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு, சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து ஒரே நாளில் அதிரடி மாற்றங்களுக்கு வழி வகுத்திருக்கிறார்.
அதன்படி கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தையும் இனி மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்குவது பற்றி முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வும் அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரமும் வருமாறு;

மாதவரம் பேருந்து நிலையம்
மாதவரம் பேருந்து நிலையமானது கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னையிலிருந்து வடக்கு நோக்கி (ஆந்திரா, நெல்லூர், திருப்பதி மற்றும் காளஹஸ்தி (செங்குன்றம் வழியாக) செல்லும் பேருந்துகளுக்கான தனிப் பேருந்து நிலையம் ரூ.94.16 கோடி செலவில் 8 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு 10.10.2018 முதல் மக்கள் பயன்பாட்டிற்காக இயங்கி வருகிறது. இப்பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், அமைச்சருமான சேகர்பாபு நடத்திய ஆய்வில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

வடக்கு நோக்கி செல்லும் பஸ்கள்
இப்பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தையும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க போக்குவரத்து துறை அமைச்சருடன் கலந்தாலோசிக்க முடிவு செய்யப்பட்டது. வடக்கு நோக்கி செல்லும் தனியார் பேருந்துகளையும் கோயம்பேட்டிலிருந்து, இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி பெட்டி
ஆந்திரப்பிரதேசம் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தங்கும் அறை போதுமானதாக இல்லாததால் கூடுதல் இடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆடவர் மற்றும் பெண்கள் பயணியர் தங்கும் கூடங்களை 2, 4 மற்றும் 6 பேர் தங்கும் அறைகளாக மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. பயணிகளின் காத்திருக்கும் அறைகளில் இருக்கை வசதி மற்றும் தொலைக்காட்சி பெட்டி அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

அறிவிப்பு பலகை
முதல் மாடியில் உள்ள பேருந்துகள் காத்திருக்கும் பகுதியில் பேருந்துகள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மாநகர பேருந்து நிறுத்தம் இடத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டிற்கு LED அறிவிப்பு பலகை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நுழைவு வளைவு
பேருந்து வளாகத்தின் மாநகர பேருந்து நுழைவு வாயிலில் நுழைவு வளைவு அமைக்க முடிவு செய்யப்பட்டது.பேருந்து நிலையத்தின் தென்புறமுள்ள நுழைவு வாயிலில் போக்குவரத்தின் காரணமாக விபத்து நிகழாதிருக்க காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது. கட்டிடப் பணிகளை மேம்படுத்தவும் மற்றும் தோட்டத்தை பராமரிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications