மீனவர்கள் யாருக்கும் மானியம் ரத்து செய்யப்படவில்லை.. விஜய் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு
சென்னை: தவெக கொடியின் வண்ணம் இருந்ததால் மீனவப் படகுககளுக்கு மானியம் மறுக்கப்பட்டுள்ளதாக கூறி விஜய் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மீனவர்கள் யாருக்கும் மானியம் ரத்து செய்யப்படவில்லை என்றும், படகுகளில் அரசு குறிப்பிட்டுள்ள வண்ணத்திற்குப் பதிலாக வேறு வண்ணம் பூசியவர்களுக்கு, அரசின் அறிவுறுத்தல்படி வண்ணத்தை மாற்றிய பிறகு மானியம் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் தங்களுடைய படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க மறுக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். திமுக அரசு இதுபோன்ற செயல்களை கைவிடவில்லையெனில் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றும் விஜய் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், "திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சேர்ந்த எங்கள் கழகத் தோழர்கள், தங்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் மீன்பிடித் தொழிலுக்கான தங்களின் படகுகளைத் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயருடன் பயன்படுத்தி வந்துள்ளனர்.
படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை எழுதியிருந்ததால் அரசு சார்பில் வழங்கப்படக்கூடிய மானியத்தை வழங்க முடியாது என்று அரசாங்க ஊழியர்கள் படகுகளின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற எதேச்சதிகார அராஜக ஆட்சியின் வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிய, கச்சத்தீவை மீட்பது அல்லது அதைக் குத்தகைக்கு எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வாழ்ந்தும் அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநில அரசானது அவர்களை ஏதோ அவர்களுக்கும் அரசுக்கும் தொடர்பில்லாதவர்கள் போல எதேச்சதிகார அரச பயங்கரவாதத்தோடு நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதியிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்?.
மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் என்பது திமுகவின் பணம் அல்ல, மக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணம், மீனவர்களின் பணம். தமிழ்நாடு அரசு இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாபெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மீனவர்கள் யாருக்கும் மானியம் ரத்து செய்யப்படவில்லை என்றும், படகுகளில் அரசு குறிப்பிட்டுள்ள வண்ணத்திற்குப் பதிலாக வேறு வண்ணம் பூசியவர்களுக்கு, அரசின் அறிவுறுத்தல்படி வண்ணத்தை மாற்றிய பிறகு மானியம் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டின் மீனவப் படகுகளில் பச்சை நிற பெயிண்ட் அடித்திருக்க வேண்டும். படகுகளில் அரசு குறிப்பிட்டுள்ள வண்ணத்திற்குப் பதிலாக வேறு வண்ணம் பூசியவர்களுக்கே மானியம் மறுக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தலை ஏற்ற படகுகளில் வண்ணத்தை மாற்றிய பிறகு மானியம் வழங்கப்பட்டது. படகுகளில் பச்சை நிறமே பயன்படுத்தாமல் வெறும் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது. அரசின் விதிப்படி பச்சை நிற பெயிண்ட் அடிக்க வேண்டுமென்பதால் துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பார்கள்.
மீனவர்களுக்கு மானியம் எல்லாம் நிறுத்தப்படவில்லை. நிறத்தை மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டு, மானியம் வழங்கப்பட்டது. யாருக்கும் மானியம் ரத்து செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications