அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை .. சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Recommended Video

சென்னை: விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் எம்பி. எம்எல்ஏக்களின் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றம் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கி வருகிறது. அதன்படி, பாலியல் வழக்கு ஒன்றில் பெரம்பலூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்த நீதிமன்றத்தில் தற்போது அமைச்சராக உள்ள பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிரான வழக்கு நடைபெற்று வந்தது. 1998ம் ஆண்டு ஓசூரில் கள்ளச் சாராயத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. காவல்துறை வாகனமும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மொத்தம் 108 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
அந்த வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட மொத்தம் 16 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, சென்னை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்த வழக்கில் நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. சிறை தண்டனையுடன் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் பதவி போகுமா?
2 ஆண்டுகளுக்கு அதிகமாக சிறை தண்டனை விதித்துள்ளதால் அவரது அமைச்சர் பதவியும். எம்எல்ஏ பொறுப்பும் பறிபோகும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எம்எல்ஏ பதவியை இழந்தால், அமைச்சர் பதவியும் பறி போகும் என்று மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார். அவர் தற்போது ஓசூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

தண்டனை நிறுத்தி வைப்பு
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சராக நீடிக்க முடியாது என்பதுடன், எம்எல்ஏ பதவியும் பறிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பைத் தொடர்ந்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால் உடனடியாக பதவி போவதிலிருந்து தப்பியுள்ளார் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி.

2வது தீர்ப்பு
சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் 2வது வழக்காகும். இதற்கு முன்பாக சில வாரங்களுக்கு முன்னர் பெரம்பலூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.












Click it and Unblock the Notifications