ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கு.. சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சசிகலா தரப்பினர், உள்ளிட்டோர் விசாரணை வளையத்துக்குள் உள்ளனர்.
இதில் சில தினங்களுக்கு முன்பு அப்போலோ நிர்வாகம் ஜெயலலிதா சிகிச்சை, மற்றும் உணவு செலவு கணக்கை ஆணையத்திடம் தாக்கல் செய்தது. இதில் சசிகலா குடும்பத்தினர் தங்கிய அறைக்கான வாடகை மட்டும் 1.24 கோடி என்று இருந்தது. ஆனால் அதைவிட பெரிதாக பேசப்பட்டது, சிகிச்சையின்போது, ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ. 1.17 கோடி செலவாகியது என்று சொல்லி இருந்ததுதான்.

மதுசூதனன்
ஒரு நோயாளி இவ்வளவு ரூபாய்க்கு சாப்பிட்டாரா என்று அதிர்ச்சியில் உறைந்த தமிழக மக்கள், தங்கள் ஆதங்கத்தை மீம்ஸ்களாக வெளியிட்டு கிழித்து தொங்க விட ஆரம்பித்து விட்டார்கள். இது சம்பந்தமாக ஆளும் தரப்பில் யாருமே வாய் திறக்காமல் இருந்த நிலையில், கடந்த வாரம் கட்சி அவை தலைவர் மதுசூதனன் மட்டும் ஜெயலலிதாவின் சாப்பாட்டு பில் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

சசிகலா குடும்பம்
இப்போது, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது சசிகலா குடும்பத்தை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார். அமைச்சர் பேட்டியில் சொன்னதாவது:

உயிரோடு இருந்திருப்பார்
ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதை தடுத்திருக்கிறார்கள். வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கவிடாமலும், ஆஞ்சியோகிராம் செய்யவிடாமலும் தடுத்தது யார் என்பதை ஆணையம் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டிருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது.

விசாரிக்க வேண்டும்
ஜெயலலிதா மரணம் குறித்து அரசு, சிறப்பு விசாரணை குழு அமைக்கவேண்டும். அத்துடன், சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

பெரும் சலசலப்பு
ஜெயலலிதா இறந்து 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அப்போலோ ஆஸ்பத்திரி சாப்பாட்டு பில் தந்து இத்தனை நாள் ஆன நிலையில், தமிழக அமைச்சர் ஒருவர் முதன்முறையாக இப்படி கருத்துக்களையும், குற்றச்சாட்டுக்களையும் தெரிவித்திருப்பது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications