வானதி சீனிவாசன் புகுந்த வீட்டை பத்தி பேசுனா நான் பதில் சொல்றேன்.. துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை!
சென்னை: இன்று சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோரிக்கைக்கு அமைச்சர்கள் பதில் அளித்தபோது, மூத்த அமைச்சர் துரைமுருகன் அடித்த கமெண்ட், சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. காலை, மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடத்தப்பட்டு 16 அமர்வுகளாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தொடர்ந்து நான்காவது நாளாக கள்ளக்குறிச்சி விவகாரத்தை முன்னிறுத்தி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

வானதி சீனிவாசன் கோரிக்கை: தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அந்த வகையில் கோவை மாவட்டத்திற்கு அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்துப் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கோவை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு அவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என செயல்படவில்லை எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, கோயம்புத்தூருக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என வானதி சீனிவாசன் தெரிவிப்பார். ஆனால், கோவைக்கு 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னைக்கு அடுத்த படியாக கோயம்புத்தூர் மாநகராட்சிக்குத் தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
துரைமுருகன் கமெண்ட்: அப்போது குறுக்கிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "வானதி சீனிவாசன் பிறந்த வீட்டை பற்றியே பேசுகிறார். எப்போது புகுந்த வீட்டை பற்றி பேசுகிறாரோ, அப்போது நான் பதில் அளிக்கிறேன்" என்று கூறினார். மூத்த அமைச்சர் துரைமுருகனின் இந்த பதில் பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
பாஜக எம்.எல்.ஏ வானதியின் கணவர் சீனிவாசன் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்தவகையில், வானதியின் புகுந்த வீடு வேலூர். எனினும், வானதி சீனிவாசன், தான் பிறந்த கோவை தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். கோவைக்காக அவர் எழுப்பிய கோரிக்கையை சுட்டிக்காட்டியே அமைச்சர் துரைமுருகன், கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளார்.
அகம் - புறம்: மேலும், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், குழந்தைகளிடையே சாதி வேறுபாடுகளை களைவதற்கு கொடுக்கப்பட்ட நீதிபதியின் அறிக்கை மிகவும் சென்சிடிவ் ஆனதாகவும், பலரின் நம்பிக்கையை பாதிக்கும் விதமாகவும் உள்ளது. சாதிய பிரச்சனையை களைவதற்கு புற அடையாளத்தை களைவதற்கு முயற்சி எடுக்கின்றனர். அகத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு, மாணவர்கள் கையில் சில அடையாளம் அணிந்து செல்வது, அதனால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவே நீதிபதி அறிக்கை இருக்கும் என நம்புகிறேன். எனக்கு தெரியவில்லை, இங்கிருந்து வெளியே செல்லும் போது தவறுதலாக சென்று விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications