வெள்ளம் வந்தபோது உதவியவர்கள் மட்டும் பேசலாம்.. பிரதமர் மோடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
சென்னை : வெள்ள பாதிப்பின்போது உதவியவர்களுக்கு மட்டுமே வெள்ளத்தைப் பற்றி பேச உரிமை உண்டு என்று தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, சென்னை நந்தனத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுகையில், திமுக அரசை மிகவும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, சென்னை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது திமுக அரசு செயல்படவே இல்லை என்றும், மக்களின் துயரங்களைப் புரிந்துகொண்டிருப்பது மத்திய அரசு தான் என்றும் கூறினார்.

பிரதமர் மோடி பேசுகையில், “அண்மையில் சென்னை புயலால் பாதிக்கப்பட்டது. சென்னையில் வெள்ள நீர் மேலாண்மையை திமுக அரசு சரிவர செயல்படுத்தவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு எந்தவிதமான உதவிகளும் செய்யாமல் அவர்களின் துயரத்தை அதிகப்படுத்தியது. வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பாலும் தேனும் ஓடுவதாக திமுக தெரிவித்தது. மக்களின் சுக துக்கங்களில் திமுக அரசுக்கு அக்கறையில்லை. வெள்ள மேலாண்மையை செய்யாமல் ஊடக மேலாண்மையை செய்கிறார்கள்.
மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. மக்களுக்கு நேரடியாக நிவாரணம் சென்றுவிடுவதால் திமுகவினருக்கு வருத்தம். தமிழக வளர்ச்சித் திட்டங்களில் கொள்ளையடிக்க முடியாமல் இருப்பதே திமுகவினரின் வருத்தம். திமுக கொள்ளையடித்த பணம் மீட்கப்பட்டு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழங்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்.” எனப் பேசினார் பிரதமர் மோடி.
இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் வெள்ள பாதிப்பை திமுக அரசு சரியாக கையாளவில்லை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், “வெள்ள பாதிப்பின் போது உதவியவர்கள், பொன்னும் பொருளும் கொடுத்தவர்கள், சேற்றில் நடந்தவர்களுக்கு மட்டுமே வெள்ளத்தைப் பற்றி பேச உரிமை உண்டு. வானத்தில் பறந்து கூட பார்க்காதவர்களுக்கு வெள்ளத்தைப் பற்றி பேச உரிமை இல்லை” என்று கடுமையாக சாடினார்.
மேலும் பேசிய அமைச்சர் துரைமுருகன், "வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை மீட்டு வந்து இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 15 லட்சம் தருவதாகச் சொன்னார் மோடி, பிரதமர் மோடி அளித்த அந்த உத்தரவாதத்தை நிறைவேற்றினாரா?" எனவும் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications