அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு எதிரொலி... முல்லை பெரியாறு அணைக்கு செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்..!
சென்னை: முல்லைப் பெரியாறு அணையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை நேரில் பார்வையிடுகிறார்.
முல்லை பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு அண்மையில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக்கொடுப்பதாக விமர்சனங்கள் எழத் தொடங்கின. மேலும், இந்த விவகாரத்தை மையமாக வைத்து தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனிடையே முல்லை பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதை கண்டித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். லோயர் கேம்பில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் கூட நடத்தினர்.
முல்லை பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்ட விவகாரம் இப்படி நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை முல்லை பெரியாறு அணைக்கு செல்கிறார். இதற்காக சென்னையிலிருந்து மதுரை வரை விமானம் மூலம் செல்லும் அவர் அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக பயணிக்கிறார்.
முல்லை பெரியாறு அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாகவும் தமிழகத்தின் உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் துரைமுருகன் வருகையை ஓட்டி தமிழக நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணையில் இன்றே முகாமிடுகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு தேக்கடியில் தங்கி முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தும் திட்டத்தில் இருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். படகில் சென்று அமைச்சர் துரைமுருகன் ஆய்வு நடத்தவுள்ளதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பிலும் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications