துரைமுருகன் இலாகாவை பறிச்சு அவர்கிட்ட கொடுக்கப் போறாங்க.. புட்டுப் புட்டு வைக்கும் திருச்சி சூர்யா!
சென்னை: செந்தில் பாலாஜி அமைச்சராவது உறுதி, அவருக்காகவே உதயநிதி ஸ்டாலின் வெய்ட்டிங்கில் இருக்கிறார், துரைமுருகன் வசம் இருக்கும் முக்கியமான இலாகா கே.என்.நேருவுக்கு வழங்கப்பட இருக்கிறது என விரைவில் நடைபெற இருக்கும் அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்களை நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள நேர்காணலில் அடுக்குகிறார் திருச்சி சூர்யா.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை எப்போது மாற்றப்படும் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாகவே பேசுபொருளாக இருந்து வருகிறது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, வேறு சில அமைச்சர்களின் இலாகா மாற்றம், புதிதாக கேபினட்டில் இணையும் சிலர் என அரசல் புரசலாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்துள்ளதால் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும், அமைச்சரவை மாற்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரும் நிச்சயம் இடம்பெறும் என்றும் தெரிகிறது.
துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க திமுகவில் அத்தனை பேரும் ஆதரவு தெரிவித்தாலும், துரைமுருகன் புழுக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் குறித்தெல்லாம் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகனும், முன்னாள் பாஜக மாநில நிர்வாகியுமான திருச்சி சூர்யா.
திருச்சி சூர்யா பேசுகையில், "உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக் கூட்டங்களுக்குச் சென்றபோது தவறு செய்த அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். துறை நிர்வாக ரீதியாக, கோப்புகள் கிடப்பில் போடப்படாமல் உடனடியாக ஒப்புதல் ஆகின்றன, பணிகளில் உதயநிதி வேகம் காட்டுகிறார் என அதிகாரிகளே சொல்கிறார்கள்.
இப்போதே உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படாத துணை முதலமைச்சராகவே செயல்பட்டு வருகிறார். முதல்வருக்கு நிகராக அவருக்கு ஆட்சியிலும், நிர்வாகத்திலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. துணை முதல்வராக அறிவிக்கப்பட்டால் சட்டசபையில் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அமர்வார், துரைமுருகன் 3வது இடத்திற்குப் போய்விடுவார்.
துரைமுருகனுக்கு அவர் உழைப்புக்கு அதிகமாகவே திமுக தலைமை முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அவரது மகனுக்கும் இரண்டாவது முறையாக எம்.பி சீட் கொடுத்து வெற்றி பெற வைத்துள்ளனர். ஆனால், இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்குவதை பொறுக்க முடியாமல் இருக்கிறார் துரைமுருகன்.
வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் கனிம வளத்துறையை துரைமுருகனிடம் இருந்து பறித்துவிடுவார்கள். நீர்வளத்துறை மட்டுமே அவரிடம் இருக்கும். உள்ளாட்சித் துறையை உதயநிதி வசம் கொடுத்துவிட்டு, கனிம வளத்துறையை கே.என்.நேருவிடம் கொடுக்கப் போகிறார்கள். துணை முதல்வராக உள்ளாட்சித்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகிக்கப் போகிறார். மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறையும் மாற்றப்பட இருக்கிறது.
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அவர் வகித்த இலாகாக்கள் வழங்கப்படும். கட்சித் தலைமை அவரைக் கைவிடாது. திமுக தலைமையை நம்பி வந்திருக்கிறார், அவரைக் கைவிட்டால் நாளை மற்ற கட்சிக்காரர்கள் கட்சி மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள். பாஜகவை அண்ணாமலையை எதிர்த்ததால் அவர் அழுத்தத்தின் காரணமாக கைது செய்யப்பட்டார். எனவே அவரை காப்பாற்றுவதை திமுக தலைமை தங்கள் கடமையாகவே நினைக்கும்." எனத் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications