நல்ல விஷயம்! விஜய் மக்கள் இயக்கம் தொடங்கவுள்ள இரவு பாடசாலை குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில்!
சென்னை: விஜய் மக்கள் மன்றத்தின் சார்பாக விஜய் பயிலகம் என்ற பெயரில் இரவு பாடசாலை திட்டம் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட இருப்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் மூலம் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இலவச மதிய உணவு, முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் மரியாதை செலுத்துவது, 10ஆம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியது உள்ளிட்ட செயல்பாடுகளால் விஜய் தனது அரசியல் நகர்வை தொடங்கி விட்டார் எனப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அண்மையில் பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய நடிகர் விஜய், தமிழ்நாடு முழுவதும் இரவு நேர பாடசாலை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். மேலும் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் அந்த திட்டத்தை தொடங்கவேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
'விஜய் பயிலகம்' என்ற பெயரில் இன்று முதல் இரவு பாடசாலைகளை தமிழ்நாடு முழுவதும் தொடங்க உள்ளது விஜய் மக்கள் இயக்கம். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 'விஜய் பயிலகம்' தொடங்கப்படும் என்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்ட நலத்திட்டங்களும் இன்று வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் இந்த திட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த திமுக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், "மக்களின் நன்மதிப்பை பெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் இரவு பாடசாலை தொடங்குவது நல்ல விஷயம் தான்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பாடசாலை அமைக்கப்படுவது நல்ல விஷயம். எங்களின் திட்டமான இல்லம் தேடி கல்வி முறை போலவே விஜய்யும் இரவு பாடசாலை அமைப்பது நல்ல விஷயம் தான். கொரோனா காலத்தில் பல தன்னார்வலர்கள் வீடு தேடி சென்று இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் சேவைகளை வழங்கினர். அந்தவகையில் விஜய் செய்யும் இந்த செயலும் வரவேற்கத்தக்கது" என்றார்.












Click it and Unblock the Notifications