பொதுப்பணித்துறை பொறியாளர்கள் அப்டேட்டாக இருக்கணும்! பாடம் நடத்திய அமைச்சர் எ.வ.வேலு!
பொதுப்பணித்துறை பொறியாளர்கள் அப்டேட்டாக தங்களை வைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் அறிவுரை
சென்னை: பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உலகளவில் சந்தையில் கிடைக்கும் நவீன கட்டுமானப் பொருள்களின் வருகை, அவற்றின் தன்மை, பயன்பாடு, விலை ஆகியவற்றை அவ்வப்போது அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு பாடம் நடத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது;

பொதுப்பணித்துறை
''பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் இயற்கை சீற்றங்களான பூகம்பம், புயல் மற்றும் சுனாமி போன்றவற்றை எதிர்கொள்ளும் விதத்தில் தரம் மற்றும் உறுதித்தன்மையுடன் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டுமானம் AEC என்னும் மூன்று அங்கங்களைக் கொண்டது. அதாவது A-ஆர்க்கிடெக்ட்ஸ், E-இன்ஜினியர்ஸ், C-கான்ட்ராக்டர்ஸ். இந்த மூன்று அங்கங்களும், ஒன்றுடன் ஒன்று இணைந்து பணிபுரிந்தால், கட்டுமானங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியும்.''

கட்டுமானத்தின் வெற்றி
''ஒரு கட்டுமானத்தின் வெற்றி என்பது, அக்கட்டுமானம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்படுகிறதோ, அந்த நோக்கத்தினை நிறைவேற்றுவதாக அமைவதைப் பொறுத்ததாகும். உதாரணமாக, மருத்துவத்துறையின் பயன்பாட்டிற்கான கட்டடம் எனில், அது தொடர்பான அடிப்படை அறிவினைக் கட்டுமானத் துறையின் மூன்று அங்கங்களும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். அதற்காக அத்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடி, தேவைகளை அறிந்து, அவற்றைத் தற்கால தொழில் நுட்பங்களுடன் இணைத்து, கட்டுமானங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.''

நவீன கட்டுமானப் பொருள்கள்
''கட்டுமானப் பொறியியல் வல்லுநர்கள் உலகளவில் சந்தையில் கிடைக்கும் நவீன கட்டுமானப் பொருள்களின் வருகை, அவற்றின் தன்மை, பயன்பாடு, விலை ஆகியவற்றை அவ்வப்போது அறிந்து கொள்ள வேண்டும். அத்தகைய நவீன தொழில்நுட்ப நடைமுறைகளைப் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள் அறிந்து, அவற்றை இத்துறை உருவாக்கிடும் கட்டங்களில் பயன்படுத்தினால், தரம் மற்றும் உறுதித்தன்மையோடு கட்டடங்கள் உருவாகும். கட்டடங்களுக்கான செலவினங்களும் குறையும். அதுமட்டுமல்லாமல் கட்டடப் பராமரிப்புச் செலவினங்களும் வெகுவாகக் குறையும்.''

அப்டேட்ஸ் முக்கியம்
''எனவே, பொறியாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள் கட்டுமானங்களில் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு அவற்றை நடைமுறைப் படுத்துவதில், ஆர்வமுடன் செயல்பட்டாக வேண்டும். உங்கள் ஒவ்வொருக்கும் இத்தகைய ஆர்வம் மிகவும் அவசியம். கட்டடங்களை உருவாக்கும்போது, பொறியாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள் பின்வரும் நடைமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். மண் பரிசோதனை, கட்டடத்திற்கு தேவையான உறுதித் தன்மையுடன் இருக்கிறதா என்பதை முதலில் ஆராய வேண்டும்.''

பிரீபேவ் டெக்னாலஜி
''தற்போது பொதுப்பணித்துறையில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள், பீம் (Beam), சிலாப் (Slab), காலம் (Column) என்ற முறையில் பணித்தளத்திலேயே அதாவது ONSITE-ல் மேற்கொள்ளப்படுகிறது. ஊட்டி போன்ற மலைப்பகுதிகளிலும் தற்போது இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. மலைப் பகுதிகளில் தரைதளம் + முதல்தளம் என்ற அளவிலேயே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. இதுபோன்ற இடங்களில், கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல மிகுந்த நேரம் தேவைப்படுகிறது. அதனால் இவ்விடங்களில் பிரீபேவ் டெக்னாலஜி (PREFAB Technology) மூலம் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.''












Click it and Unblock the Notifications